கால்நடைத்துறையில் ஆள்தேர்வு தகவல்: போலி என அதிகாரிகள் திட்டவட்டம்...!
தமிழக கால்நடைத்துறையில், ஆட்கள் தேர்வு செய்வதாக இணைய தளத்தில் வந்த தகவல் தவறானது; யாரும் நம்ப வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
கால்நடைத்துறையில், ஆட்கள் தேர்வு செய்வதாக இணைய தளத்தில் அறிவிப்பு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தகவல் தவறானது என்றும், உண்மைக்கு புறம்பானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கால்நடை பராமரிப்பு மற்றும் கையாளுதல் மற்றும் ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு சம்பளம் முறையே 15,000 மற்றும் 18 ஆயிரம் என தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி ஆணை வழங்கப்படும் என இணையத்தளத்தில் தகவல் வெளியானது.
மேலும் இதற்கான ஆணை ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என வாட்ஸ்அப் செயலி மூலம் மற்றும் முகநூல் மூலம் வந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானவை.
இதுபோல, இணைய தளங்களில் கால்நடை பராமரிப்புத்துறை குறித்து வரும் தகவல்கள் போலியான அறிவிப்புகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும், போலியான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காஞ்சிபுரம் மாவட்ட செய்தி, மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.