காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக சுகாதார வளாகம் மூடல் பொதுமக்கள் அவதி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார வளாகம் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். இவ்வளாகத்தில் ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சமூக நலத்துறை மகளிர் காவல் நிலையம் என 30க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
இதுமட்டுமில்லாமல் நாள் தோறும் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் குறைகளை தெரிவிக்க நூற்றுக்கணக்கான மக்கள் அலுவலக நேரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருவது வழக்கம்.
இந்நிலையில் பொதுமக்களுக்கு என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள கூட்டரங்கில் அருகே பொதுமக்கள் இலவச கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியே அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.
நேற்று முதல் ஆண்கள் கழிவறை பூட்டப்பட்டு காணப்படுவதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி பொது இடங்களில் சிறுநீர் கழித்து சென்றுவிடுகின்றனர்.
பொது சுகாதாரத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள பொது கழிவறை மூடப்பட்ட செயல் வருத்தம் அளிக்கிறது. உடனடியாக இதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் திறந்து சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.