திறமைகளை வெளிப்படுத்துவதே வெற்றியாகிறது: இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா காஞ்சிபுரத்தில் பேட்டி..!
தக்க சமயத்தில் திறமைகளை சமயோசிதமாக வெளிப்படுத்துவதே முழு வெற்றியாகிறது என, இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா காஞ்சிபுரத்தில் பேட்டியளித்தார்.
HIGHLIGHTS
உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய சென்னையை சேர்ந்த 16 வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. செஸ் உலகில் பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டி வரும் ஜூலை 28ல் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறுகிறது. இதில், 187 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எட்டாவது தேசிய யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா காஞ்சிபுரம் வருகை புரிந்தார். இதையடுத்து, காஞ்சிபுரம் உலகப் புகழ்பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது தாயாரின் நீண்ட நாள் ஆசையாக இருந்த காமாட்சி அம்மன் தரிசனம் தற்போது மகிழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.என குறிப்பிட்டார்.
மேலும் மாமல்லபுரம் போட்டிக்கான பயிற்சிகள் சிறப்பாக இருந்தது எனவும், இப்போட்டி தமிழகத்தில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதற்காக செஸ் போர்டு வாரியத்திற்கும், தமிழக முதல்வருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தா தெரிவித்தார். தான் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் ஒருபோதும் போட்டியின்போது வெற்றி என்னும் நோக்கில் செயல்படாமல் தனது திறமையை வெளிப்படுத்துவதில் மட்டுமே முழு வெற்றி கிடைக்கிறது என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, செஸ் மஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் காமாட்சி அம்மன் திருஉருவப்படம் அளித்து, பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அப்போது அவரது தாயார் நாகலட்சுமி, பயிற்சியாளர் ரமேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.