நீட் தேர்வை எதிர்த்து திமுக உண்ணாவிரத அறப்போராட்டம்..!
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பெரியார் தூண் அருகே நீட் தேர்வை ரத்து செய்ய உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசு மற்றும் ஆளுநரை கண்டித்து உண்ணாவிரத அறப்போராட்டம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் தலைமையில் துவங்கியது.
தமிழகத்தில் நீட் தேர்வால் 21 மாணவ,மாணவிகள் உயிரிழந்த நிலையில், நீட் தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகளும் விவாதங்களும் பெரிய அளவில் நிகழ்ந்து வருகிறது. திமுக கூட்டணி கட்சிகள் நீட் தேர்வை பெரிதும் எதிர்த்து வரும் நிலையில் இதுகுறித்து பல்வேறு போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட மாணவன் இறந்த நிலையில் அவரது பெற்றோரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கையை வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு திமுக இளைஞரணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பாக தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து தமிழக முழுவதும் இன்று உண்ணாவிரத அறப்போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறுகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
இதேபோல் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மற்றும் மருத்துவ அணி சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டம் காந்தி சாலை பெரியார் துணை அருகே மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தலைமையில் நடைபெறுகிறது.
இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், மருத்துவ அணி கதிரவன், மாணவரணி சுரேஷ் குமார், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி ராஜ், இளைஞர் அணி செயலாளர் யுவராஜ், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் , திமுக மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதேபோல் செங்கல்பட்டு திருவள்ளூர் ராணிப்பேட்டை வேலூர் உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது.