பரந்தூரில் 65 இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா : எம்.எல்.ஏ, எம்.பி வழங்கல்
சிங்காடிவாக்கம் , கரூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 65 பழங்குடியின மக்களுக்கு எம்.எல்.ஏ., எம்.பி வீட்டுமனைப்பட்டா வழங்கினர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரந்தூர் குறுவட்டத்தில் அமைந்துள்ள சிட்டியம்பாக்கம் , கரூர், வையாவூர் உள்ளிட்ட 6 கிராமங்களில் நீர்நிலைகளில் வசிக்கும் இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நெடுநாள் கோரிக்கை இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் மற்றும் காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டு 65 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினர்.
விழாவில் பேசிய எம்.எல்.ஏ.,எம்.பி ஆகியோர் தற்போது முதல்வரின் உத்தரவின் படி இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வீட்டுமனை பட்டா முதியோர் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவைகளை கணக்கெடுப்பு நடத்தி கிடைக்கப்பெறாத அவர்களுக்கு உடனடியாக வழங்க அரசு அலுவலர்கள் தயாராக உள்ளதாகவும்,
இதனை இம்மக்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு தங்களது அடுத்த தலைமுறையினருக்கு கல்வி வேலைவாய்ப்பு இருப்பிடம் ஆகியவற்றை உறுதி செய்ய ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் லட்சுமி , ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடிகுமார் , நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பி எம் குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் தேவேந்திரன், பிரசாத் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.