காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
காஞ்சிபுரம் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
HIGHLIGHTS
கோயில் நகரம் , பட்டு நகரம் என புகழ்பெற்றது காஞ்சிபுரம் .நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில் அவர்களால் வீசப்படும் குப்பைகள் மற்றும் 51வார்டுகளில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் என பல லட்சம் கழிவுகள் மாநகராட்சியால் கையாளப்படுகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி பொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறுபாடுகளில் மாநகராட்சி ஊழியர்கள் மக்கும் குப்பை , மக்கா குப்பை என எவ்வாறு தரம் பிரிப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கங்களும் தரப்பட்டு வருகிறது.
இது ஒரு புறம் இருக்க மற்றொரு முயற்சியாக குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ள இடங்களில் குப்பைகளை தொட்டியில் மட்டுமே போட வலியுறுத்தி அப்பகுதியில் சுத்தம் செய்து கோலமிட்டு , விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி வருகின்றனர்.
இது குறித்த செய்திகளும் அவ்வப்போது நாளிதழ்களில் வெளியானாலும் பொதுமக்கள் குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை போடாமல், சாலைகளில் போட்டு வருவது தொடர் கதையாகிறது.
மாநகராட்சியின் திடக்கழிவு விழிப்புணர்வு பிரச்சாரம் புரியவில்லையா ? அல்லது மேலும் வீடுகள் தோறும் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டுமா என புரியாமல் மாநகராட்சி குழம்பி வருகிறது.
மாநகராட்சியின் ஊழியர்கள் சுகாதாரத்தை வலியுறுத்தி தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் மக்கள் இதை உணர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
படிமங்கள் : பாலாஜி தெரு நான்கு முறை சந்திப்பில் குப்பை தொட்டி இருந்தும் சாலையில் குப்பை கழிவுகளை போடும் பொதுமக்கள் & மாநகராட்சி விழிப்புணர்வு வாசகங்கள்.