கீழ்கதிர்பூர் அங்கன்வாடியை முற்றுகையிடும் ஈக்கள்..!
காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியில் கோழி பண்ணைகளால் அதிகரிக்கும் ஈக்களால் நோய் தொற்றை அறியாத குழந்தைகள்.. நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம் ?
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராமத்தில் செயல்படும் அங்கான்வாடி மையத்தில் ஈக்கள் தொல்லையால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிர்பூர் கிராமம் விவசாயம் கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி பண்ணை உள்ளிட்டவைகள் பிரதான தொழிலாக கொண்டு அப்பகுதி மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கோழி பண்ணைகளால் ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
அரசு நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம் அருகே கோழிப்பண்ணை செயல்பட்டு வரும் நிலையில் ஈக்களின் தொல்லை அதிகரித்து பள்ளியில் பயில வரும் மாணவர்களின் உணவு மற்றும் தரையில் ஈக்களின் கூட்டங்கள் மொய்த்து வருகிறது.
அங்கன்வாடி குழந்தைகள் கொண்டுவரும் சிறு பலகாரங்கள் அனைத்திலும் ஈக்கள் மொய்த்து அதனை அந்த சிறு குழந்தைகள் எதிர்வினை அறியாமல் ரசித்து உண்டு சுவைத்து வருகிறன்றனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் அதனை தடுக்க பல்வேறு தடுப்பு திரவியங்கள் தெளித்தும் , அவ்வப்போது தரையை சுத்தம் செய்தும் உணவு வேலைகளின் போது மிகுந்த அக்கறை கொண்டு அதனை கண்காணித்து வருகின்றனர்.
ஈக்கள் மொய்த்த பண்டங்களை உண்ணக்கூடாது என ஆரம்பக் கல்வியிலேயே அறிவுறுத்தும் நாம் பள்ளியில் மற்றும் அங்கன்வாடியில் உள்ள உணவு மற்றும் தரைகளில் மொய்க்கும் ஈக்களை கண்டுகொள்ளாமல் அவர்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பது போல் தின்பண்டங்களும் உணவுகளும் உள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் அக்கறை கொண்டு செயலாற்ற வேண்டும் என பொதுமக்களும் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொள்கின்றனர்.