பேருந்து நிலைய மாதிரி வாக்குச்சாவடி மையத்தை தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை தேர்தல் பார்வையாளர் கற்பகம் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரு மாநகராட்சி 2 நகராட்சிகள் 3 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இன்று வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து பகுதிகளிலும் மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைத்து மாதிரி வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாதிரி வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு அதனை இன்று மாவட்ட தேர்தல் பார்வையாளர் கற்பகம் ஆய்வு செய்தார்.
இதில் வாக்குசாவடி ஊழியர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை கேட்டறிந்து, வாக்காளர்களை மாதிரி வாக்குப் பதிவு செய்யச் சொல்லி நடை முறைகளை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி , காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர், மகளிர் திட்ட இயக்குனர் பி. சீனிவாசராவ், மாநகராட்சி ஆணையாளர் நாராயணன் , உதவி திட்ட அலுவலர் எழிலரசன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.