காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுடன் எழிலரசன் எம்.எல்.ஏ. ஆலோசனை
நவீன நெல் உற்பத்தி குறித்து காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுடன் எழிலரசன் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விவசாயம் மேம்பட, உழவர் நலன் சார்ந்த திட்டங்களை உருவாக்க,பசுமைத் தன்மைகளை அதிகரிக்க, நீர்நிலைகளை அதிகரிக்க,விவசாய பொருட்களுக்கு மதிப்புக்கூட்டு ஏற்படுத்த விவசாயம் வணிகமாக மாற்ற மேற்கொள்ள வேண்ட வழிமுறைகள் குறித்து விவசாயிகளிடம் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 55 ஊராட்சிகளில் இருந்து நியமிக்கப்பட்டுள்ள 55 உழவர் நண்பர்கள், விவசாயிகள் வருகை புரிந்து அவர்களின் தேவைகள்,சந்தேகங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து க காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளாண்மைக்கென்று தனிபட்ஜெட் தாக்கல் செய்து விவசாயிகளுக்கென்று பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளார். இந்த திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதற்காக வேளாண்மை துறை சார்ந்து இருக்கக்கூடிய கால்நடை, தோட்டக்கலை,மீன்வளத்துறை, பட்டு வளர்ச்சி துறை உள்ளிட்ட பல துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து வருகை புரிந்த விவசாயிகளிடம் அரசுடைய திட்டங்கள், பயன்கள், விவசாயம் மேம்பட மேற்கொள்ள வேண்டிய பணிகள்,பொருளாதார முன்னேற்றம் அடைவதற்காக விவசாயிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகப்படியாக நெல் விவசாயம்தான் மேற்கொள்ளபபட்டு வருகிற நிலையில் மாற்றுப்பயிர் உருவாக்குதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.வணிகம் சார்ந்த முன்னேற்றம் தரக்கூடிய முருங்கை, கரும்பு, சூர்யகாந்தி போன்ற பயிர்கள் பயிரிடலாம் எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் நெல்லைஅப்படியே விற்பனை செய்வதைவிட அதனை மதிப்புக்கூட்டுகிற வகையில் அரிசி உற்பத்திக்கான ஆலையை உருவாக்குவதற்கு கூட்டாக சேர்ந்து உருவாக்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அரிசியின் அடுத்தப்படியாக உள்ள பொரி, அவல் தயாரித்தல்,போன்ற பல்வேறு மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றி வணிகம் செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மீன்வளத்துறை சார்பாக மீன்வளர்ப்பில் உணவு பொருளாக மாற்றுவதும்,ஆடம்பரமாக இருக்கக்கூடிய ஆர்ணமன்டல் ஃபிஷ் வளர்ப்பது தொட்ர்பாகவும் பேசப்பட்டுள்ளது.
இதைப்பற்றி மேலும் விவரமாக விவரிக்க விவசாய நண்பர்களுக்கு எளிதில் புரிதல் ஏற்படும் வகையில் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் இருக்கக்கூடிய பகுதிக்கு விவசாயிகளை விவசாய சுற்றுலாவாக அழைத்து செல்ல ஏற்படுத்தலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் என்றாலே பட்டுக்கு பேர் போனது,பட்டு அதிகம் நெசவு செய்யும் இடம் அந்த பட்டுக்கு தேவைப்படுகிற கோராவை தயாரிக்க பயன்படுத்தக்கூடிய பட்டு புழுக்களை உருவாக்கக்கூடிய மல்பரி என்ற பயிர்களை அதிகளவில் தருமபுரி,கிருஷ்ணகிரி,சேலம் ஆகிய பகுதிகளில் பயிரிடப்படுகிறது.அங்கே மட்டும் வளரும் பயிர்களை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் வளர்க்க முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
எனவே,இத்தகைய பயிர்களை மாதா மாதம் அறுவடை செய்து விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பிருப்பதால் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் பொருளாதார ரீதியில் பயனளிக்கக் கூடிய பயிராக இருக்கிறது.எனவே இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில், வேளாண்மை துறை இணை இயக்குநர் இளங்கோவன், கால்நடை துறை மண்டல இயக்குனர் ஜெயந்தி உள்ளிட்ட பல துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.