செய்யாறு மேம்பால பணி தாமதத்தால் மீண்டும் தடுப்பணை புனரமைக்கும் நிலை
செய்யாறு மேம்பால பணி தாமதத்தால் மீண்டும் தடுப்பணை புனரமைக்கும் பணிக்கு நிதி கோரும் நிலை ஏற்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி துவங்கியது. இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் உள்ள ஏரிகள், குளங்களில் மழை நீரால் நிரம்பின.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 23 தினங்களில் காஞ்சிபுரம் பகுதியில் 304 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 308 மில்லி மீட்டர், உத்திரமேரூர் 433 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 204 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கம் பகுதியில் 380 மில்லி மீட்டரும், குன்றத்தூர் பகுதியில் 380 மில்லி மீட்டர் என மொத்தம் 2112 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் சுற்றுப்பகுதியில் கன மழை பெய்ததும், திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுப்பகுதியில் மழை பெய்த காரணமாக மாகரல் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கச்சேரி காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாகரலை இணைக்கும் செய்யாற்று பாலம் கடந்த 2015 ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக சேதம் அடைந்தது,
இதே பகுதியில் தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது ரூ. 8 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட கனமழை காரணமாக முற்றிலும் செய்யாறு மேம்பாலம் சேதமடைந்து அன்று முதல் இன்று வரை ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் வெள்ளப்பெருக்கால் தற்காலிக பாலமும் சேதமடைந்து போக்குவரத்து அவ்வப்போது பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மூன்று நாட்கள் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு அதன் பின் மெல்ல மெல்ல சரி செய்யப்பட்டு தற்போது போக்குவரத்து தடையில்லாமல் சென்று வருகிறது.
இந்நிலையில் செய்யாற்றையொட்டி உள்ள காவந்தண்டலம் கிராமம் ஏரிக்கு நீர் செல்ல வேண்டிய கால்வாயும், முற்றிலும் தடைப்பட்டு துளிநீர் கூட அக்கிராம ஏரிக்கு செல்லவில்லை.
இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையில் மெத்தன போக்கால் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் புதிய மேம்பாலம் கட்டப்படாததால் தடுப்பணையை மீண்டும் புனரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்காலிக மேம்பாலத்தின் ஒரு பகுதியில் மட்டுமே நீர் செல்வதால் அதிக அளவு நீர் செல்ல இயலாதால் தடுப்பணையின் முன் பின் கட்டுமான பகுதிகள் சேதமடைந்தது.
மேலும் காவந்தண்டலம் ஏரிக்கு செல்லும் கால்வாயை புனரமைக்கவும் , தடுப்பணை புனரமைக்கவும் ரூ 12 கோடி நிதி அரசிடம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. குறிப்பாக தடுப்பணைக்கு மீண்டும் ரூ. 8 கோடி திட்ட மதிப்பில் புனரமைப்பு பணியும், நான்கு கோடி ரூபாய் கால்வாய் புனரமைப்பு பணிக்கும் என தெரியவந்துள்ளது.
ஏற்கனவே புதிய தடுப்பணை கட்ட எட்டு கோடி செலவாகும் நிலையில் தற்போது அதை புனரமைக்கவும் எட்டு கோடி நிதி தேவைப்படுவது அதிர்ச்சியை அளித்துள்ளது.
உரிய காலத்தில் புதிய மேம்பாலப் பணி நடைபெற்று இருந்தால் மீண்டும் பல கோடி ரூபாயை இதற்கு செலவிடாமல் மேலும் ஒரு புதிய இடத்தில் தடுப்பணை அமைத்திருந்தால் விவசாயிகள் மற்றும் குடிநீர் ஆதாரங்களுக்கு பெரிதும் உதவி இருக்கும் என பொதுமக்கள் கூறி வருகிறார்கள்.