தூய்மை பணியாளர்கள் பயணம் செய்ய குப்பை வண்டியா ?
தூய்மை பணியாளர்களை பணிக்கு அழைத்து செல்ல குப்பை வண்டியை பயன்படுத்துவதை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை பணிக்கு அழைத்துச் செல்ல குப்பை வண்டி வாகனத்தை பயன்படுத்தியதற்கு பொது மக்களிடையே பெருத்த கண்டனத்தை எழுப்பியுள்ளது. காஞ்சிபுரம் பெரு நகராட்சி சார்பில் நாள்தோறும் தூய்மைப் பணி மேற்கொள்ள நூற்றுக்கணக்கான பணியாளர்கள் மண்டலங்கள் வாரியாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் மதிய உணவிற்காக செவிலிமேடு பேரூராட்சி அலுவலகத்தில் ஒன்று கூடுவது வழக்கம். மீண்டும் சிறிது நேர ஓய்வுக்குப் பின் தங்கள் பணிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இவர்களை பணிபுரியும் இடத்திற்கு அழைத்துச் சென்று விட பேரூராட்சி வாகனம் பயன்படுத்தப்பட்டது, பொது மக்களிடையே பெருத்த கண்டனத்தை பெற்றுள்ளது.
மேலும் அந்த வண்டியில் தற்போதைய கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தனிமனித இடைவெளி ஏதுமின்றி அவர்கள் பயணிப்பதும், பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டிய பெருநகராட்சி, பணியாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் இப்படி நடந்து வருவது வருத்ததிற்குரியது என மக்கள் கூறுகின்றனர்.