விவசாயிகளை தவறாக பேசிய வேளாண்மை இணை இயக்குனர்: பெரும் கூச்சல் குழப்பம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ. ருத்ரய்யா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் துவங்கியது
. கூட்டம் தொடங்கியதும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ப.இளங்கோவன் அறிக்கை ஒன்றை வாசிக்க தொடங்கினார். அப்போது விவசாயிகள் சங்க செயலாளர் கே.நேரு எழுந்து அந்த அறிக்கை தொடர்பாக பேச எழுந்த போது , வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் நீங்கள் அரசியல் கட்சியை சேர்ந்தவர். கட்டப்பஞ்சாயத்து போல பேசக்கூடாது உட்காருங்கள் என்று சொன்னார்.
அவரது பேச்சை கேட்டதும் கூட்டத்துக்கு வந்திருந்த விவசாயிகள் பலரும் கோபமடைந்தனர். கட்டப்பஞ்சாயத்து என்ற வார்த்தையை வாபஸ் வாங்க வேண்டும். மன்னிப்பு கேட்கும் வரை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்வோம் என்று விவசாயிகள் அனைவரும் கூறினார்கள்.
அதிகாரிகள் சமாதானம் செய்தும் விவசாயிகள் அதை பொருட்படுத்தாமல் கூச்சலிட்டனர். இதனால் கூட்டத்தில் கூச்சலும் குழப்பமாக இருந்தது. அந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்தார். அவரிடம் வேளாண்மை இணை இயக்குனர் ப.இளங்கோவன் கூறிய வார்த்தையை வாபஸ் வாங்க சொல்லுமாறு விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
கூட்டம் முடிந்த பிறகு இது பற்றி நான் விசாரிக்கிறேன் என மாவட்ட ஆட்சியர் விவசாயிகளிடம் தெரிவித்தார். அப்போது வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் நான் பேசுவதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியதை தொடர்ந்து மீண்டும் விவசாயிகள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடர்ந்து நடைபெற்றது.