பட்டா மாற்றத்திற்கு பணம் கேட்ட ஆடியோ: காஞ்சியில் பரபரப்பு
சாத்தான்குட்டையை சேர்ந்த தினேஷ் மற்றும் டில்லி பாபு சகோதரர்கள் புதியதாக வாங்கிய வீட்டு மனைக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்தனர்.
HIGHLIGHTS
மாநகராட்சி அலுவலகத்தில் போதிய அலுவலர்கள் இல்லாததால் ஆள் வைத்து வேலை பார்ப்பதாகவும் அவர்களுக்கு சம்பளம் வழங்க லஞ்சம் கேட்பதாக கூறும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சி அளிக்கிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 51 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாங்கப்படும் சொத்துகளுக்கு பெயர் மாற்றம் மற்றும் நில அளவை செய்ய விண்ணப்பித்து அதை நில அளவையர் சரி பார்த்து, வட்டாட்சியர் கையொப்பம் செய்த பின்னரே பெயர் மாற்றம் செய்யப்படும்.
இந்நிலையில் சாத்தான்குட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் டில்லிபாபு சகோதரர்கள் என்பவர் தமால்வார் தெரு பகுதியில் வேல்முருகன் என்பவரிடம் சிறிய வீட்டு மனையினை கடந்த ஜூலை மாதம் வாங்கி உள்ளனர். இதனை முறையாக ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள காஞ்சிபுரம் சார்பதிவாளர் அலுவலகம் -1 ல் பத்திரப்பதிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி நில அளவை பிரிவில் புதியதாக வாங்கிய இடத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நில அளவை பிரிவில் சம்பந்தப்பட்ட இடத்தை அளந்து அதனை தவறுதலாக பதிவு செய்துள்ளார். இதை சரி செய்து தருமாறு தினேஷ் என்பவர் கேட்டபோது ரூபாய் ஐந்தாயிரம் பணம் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து அலுவலகத்தில் சென்று தினேஷ் முறையிட்டபோது, மாநகராட்சி அலுவலகத்தில் போதிய அலுவலர்கள் இல்லாததால் தனிப்பட்ட முறையில் உதவியாளர்களை வைத்து இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அவர்களுக்கு உங்களைப் போன்றவர்கள் அளிக்கும் பணத்தில் தான் சம்பளம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அலுவலர்கள் தினேஷை போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, திருத்தங்களுடன் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டு நிறைவு பெற்று விட்டதாகவும், ரூபாய் 5,000 கொடுத்துவிட்டு பெற்றுக்கொள்ளுமாறும் கூறியதை தொடர்ந்து தற்போது தன்னிடம் பணம் இல்லை எனவும் ஓரிரு வாரம் கழித்து மாநகராட்சி அலுவலகம் வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகள் காஞ்சிபுரம் நகரில் பரவத் தொடங்கியது. வருவாய்த் துறையினர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது பெரும் வருத்தமளிக்கிறது. அலுவலக ஊழியர்கள் தேவை என்றால் அரசுக்கு முறையாக தெரிவித்து பணியாட்களை பெற வேண்டுமே தவிர அவர்களுக்கு சம்பள பணம் தர வேண்டும் என்ற நோக்கில் வரும் பொதுமக்களிடம் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம் என இது குறித்து கேள்வி எழுகிறது.
இதுபோன்ற சம்பவம் இனி ஏற்படாத வகையில் ஊதிய அரசு அலுவலர்களை தற்காலிக பணியாக மேற்கொள்ள நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.