ரூ 53.5 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை கட்டிட பணி துவக்கம்
காஞ்சிபுரம் அருகே மாகரல் ஊராட்சியில் ரூ 53.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருந்தகம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடத்தப்பட்டது.
HIGHLIGHTS
மாகரல் கிராம ஊராட்சியில் ரூ 53.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருந்தகம் கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையை செய்து சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் , எம்.பி செல்வம் துவக்கி வைத்தனர்.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாகரல் கிராம ஊராட்சியில் காஞ்சிபுரம் மாவட்ட கால்நடைத்துறை சார்பில் கடந்த 1965 ஆம் ஆண்டு கால்நடை மருந்தகம் அப்போதைய முதலமைச்சர் பக்தவச்சலம் அவர்களால் திறக்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இக்கட்டிடம் மிகவும் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் பேரில் ரூபாய் 53.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
இதில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்படவுள்ள இந்த கட்டிடத்தில் மருத்துவ அலுவலர்கள் அறை , மருந்தகம் மற்றும் வைப்பு அறை , பணியிட அறை , கழிப்பறை மற்றும் வராண்டா உள்ளிட்ட பகுதிகள் அமைய உள்ளது. இப்படி ஐந்து மாதத்திற்குள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார், கால்நடைத்துறை உதவி இயக்குனர் திருமாகறன் , கால்நடை மருத்துவர் கார்த்திகா , ஒன்றிய செயலாளர்கள் குமணன் , பி.எம்.குமார், பொதுப்பணித்துறை அலுவலர் சோமசுந்தர், ரவிச்சந்திரன் , ஊராட்சி மன்ற தலைவர் மேத்தா, திமுக நிர்வாகிகள் வீரராகவன், தட்சிணாமூர்த்தி திருநாவுக்கரசு ராஜகோபால் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சரவணன் இன்பநாதன் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்