பேரிடர் பயிற்சி பெற்ற 215 தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்: டிஆர்ஓ வழங்கல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 தாலுக்காக்களில் 400 தன்னார்வலர்கள் தேர்வு செய்யபட்டு , முதல் கட்டமாக 250 பேருக்கு காஞ்சி மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
*ஆப்தமித்ரா* திட்டமானது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து மாநில பேரிடர் மேலாண்மையால் நடத்தப்படும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி திட்டமாகும்.
இப்பயிற்சி திட்டத்தின் நோக்கம் பேரிடர்களை புரிந்து கொள்ளுதல், தயார் நிலைப்படுத்துதல், அடிப்படைத் தேவை மற்றும் சமுதாய மக்களை காப்பாற்றும் மீட்ப்புப் பணிகள் ஆகிய திறன்களை மேம்படுத்தும் திட்டமாகும்.
பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்னர் தங்களது இடங்களில் பாதுக்காப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை அறிந்துக்கொள்ளுதல் வேண்டும்.
இப்பயிற்சியின் மூலம் தன்னார்வலர்களுக்கு பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் பேரிடர்களை கையாளும் திறன் பற்றியும் உயிர் சேதமின்றி மீட்புப் பணியில் சிறந்த முறையில் ஈடுபடுவது தொடர்பான திறன் வளர்ப்பு கொண்ட பயிற்சியாகும்.
இப்பயிற்சி மூலம் பயிற்சி பெற்றவர்கள், எதிர்வரும் பேரிடர் காலங்களில் தங்களின் பங்களிப்பை மற்றும் பொறுப்புகளை உணர்ந்து திறன் பெற்ற சமுதாயத்தை உருவாக்கிட உதவிட வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 400 தன்னார்வலர்களில், 215 தன்னார்வலர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 200 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் தங்களது வட்டங்களில் ஒரு குழுவாக செயல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் அவ்வபோது தொடர்பில் இணைந்து பேரிடர் தொடர்பான தகவல்களை பகிர்ந்துக் கொண்டு மாவட்டத்தில் உயிர் சேதம், பொருள் சேதம் இல்லாதவாறு ஏற்படுத்திட உதவிட வேண்டும்.
பயிற்சி பெற்ற 215 தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர்கோ.சிவ.ருத்தரய்யா தலைமையில் நடைபெற்றது.
இதில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி வரும் பேரிடர் காலங்களில் பொதுமக்களை காக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)ரவிச்சந்திரன், ஜீவிகே நிறுவன தலைமை நிர்வாகி சரவணன் , வட்டாட்சியர்கள் பிரகாஷ், லோகநாதன் , பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் தாண்டவமூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.