பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்த மாடுகள் பறிமுதல்
காஞ்சிபுரம் மாநகர சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாகவும் , அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்த கால்நடைகளை பிடித்தனர்.
HIGHLIGHTS
சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறு சுற்றி திரிந்த கால்நடைகளை காஞ்சிபுரம் மாநகராட்சி குழு பிடித்து பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தமிழக முழுவதும் உள்ள மாநில தேசிய நெடுஞ்சாலை கால்நடைகள் சுற்றி வருகதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலை விபத்துக்களை சந்திக்கின்றனர். மேலும் விபத்தில் உடல் உறுப்புகளையும் சில சமயங்களில் உயிரிழப்பையும் சந்திக்க நேருகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் பல்வேறு எச்சரிக்கை அளித்தும் இது போன்ற சம்பவங்களில் கால்நடை உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்படும் எனவும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
இவைகள் அனைத்தையும் கால்நடை உரிமையாளர்கள் சற்றும் பின்பற்றாமல் கால்நடை தீவனத்திற்காக மாடுகளை அவிழ்த்துவிட்டு தொடர்ச்சியாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் சிறுமி ஒருவரை சாலையில் சுற்றி திரிந்த கால்நடை பந்தாடி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், சாலைகளில் சுற்றி தெரியும் கால்நடைகளை மாநகராட்சிகள் பிடித்து அதற்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, ரங்கசாமி குளம் பகுதியில் சுற்றித்திரிந்த 9 கால்நடைகளை பிடித்து வாகனத்தில் ஏற்றி ஜவ்வாது மலை பகுதியில் கால்நடை பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் கால்நடைக்கு தேவையான தீவனங்களும் அந்த வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது வட்டாட்சியர் புவனேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக், குமரன், சங்கர் , கால்நடை மருத்துவர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என பலர் இருந்தனர்.