களக்காட்டூர் : பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை
காஞ்சிபுரம் - களக்காட்டூர் இடையே பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கான அரசு பேருந்து சேவையை மீண்டும் தொடங்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்வியை கற்க, அருகிலுள்ள காஞ்சிபுரம் பகுதியை நாடும் நிலைமை உள்ளது. கடந்த காலங்களில், இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக, பல நிறுத்தங்களில் நிறுத்த இயலாத நிலையில், அரசுப் பேருந்துகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து, காஞ்சிபுரம் களக்காட்டூர் இடையே, பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டும் செல்லும் வகையில் பள்ளி நேரங்களில் பேருந்துகளை இயக்க, பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற அரசு போக்குவரத்து கழகம், காலை 8 மணி அளவில் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து இயக்கியது. கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டு, பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று முதல் பள்ளிகள் திறந்துள்ளதால், மீண்டும் பள்ளி நேர பேருந்து சேவையை, போக்குவரத்துத்துறை துவங்க வேண்டும் என்று, பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பேருந்துகள் இல்லாததால் ஆட்டோக்களில் அதிகளவு பள்ளி மாணவர்களை ஆபத்தாக ஏற்றிச் செல்லும் நிலைமையை தவிர்க்க, அரசு பேருந்து சேவை மிக அவசியம் என கருதப்படுகிறது.