காஞ்சிபுரத்தில் மது பாட்டில்கள் கடத்திய 10 பேர் கைது, 400 மது பாட்டில்கள் பறிமுதல், போலீஸ் அதிரடி
காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் நடைபெற்ற வாகன சோதனையில் சட்டவிரோதமாக எடுத்துவந்த 400 மது பாட்டில்களை காவல்துறை பறிமுதல் செய்து இது தொடர்பாக 5 பிரிவு வழக்குகளில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . எம். சுதாகர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் பாலுசெட்டி காவல் நிலைய ஆய்வாளர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கீழம்பி சாலை சந்திப்பில் வாகன சோதனை மேற்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஆட்டோவை மறித்து சோதனை மேற்கொண்ட போது அதில் 284 மதுபாட்டில்களை கடத்தி செல்வதாக தெரியவந்தது .
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், பிரபு ஹரிஹரன், கிருஷ்ணகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் வாலாஜாபாத் மற்றும் ராஜகுளம் பகுதியில் வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாலிபர்களை மடக்கி சோதனை செய்தபோது மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.
அவரது வாகனத்திலிருந்து 70 மது பாட்டில்களை பறிமுதல் செய்து இது தொடர்பாக அர்ஜுன் ராஜ், கமல் பாஷா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பகுதியில் நேற்று நடைபெற்ற வாகன சோதனையில் மொத்தம் 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 5 வழக்குகள் பதியப்பட்டு அது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.எம். சுதாகரன் தெரிவித்துள்ளார்