பொங்கல் இலவச தொகுப்பில் தேங்காய் சேர்க்க வேண்டும்: காஞ்சியில் பாஜக ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட பாஜக விவசாய அணி சார்பில் தென்னை விவசாயிகளின் நலன் காக்க தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில். தமிழக அரசு குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது.
இதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரொக்கமாக ரூபாய் ஆயிரம் அந்தந்த நியாய விலை கடைகள் மூலம் வழங்குவதற்கு, முதலில் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் நியாய விலை கடைகளில் பெற்று கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு தற்போது டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
அறிவிப்பு வெளியிட்டபோது கரும்பு சேர்க்கப்படாத நிலையில் பாஜக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கரும்பு விவசாயி நலன் கருதி கரும்பு கொள்முதல் செய்யப்பட வேண்டும் என தொடர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
அவ்வகையில் முழு கரும்பு பொங்கல் தொகுப்பு பொருட்களில் இடம் பெற்றது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் தமிழர்கள் பூஜை பொருட்களில் முக்கிய இடம் வகிக்கும் தேங்காய் 10 இலவசமாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும், தென்னை விவசாயிகளின் நலன் காக்க உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக முழுவதும் இன்று பாஜக விவசாய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக விவசாய அணி தலைவர் மே. பிரபாகர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உரித்த மற்றும் முழு தேங்காய்களை ஆர்ப்பாட்டம் பகுதியில் கொட்டி தமிழக அரசு உடனடியாக தென்னை விவசாயிகளின் நலன் கருதி கொள்முதல் செய்ய வேண்டும் முழு கரும்பு இணைத்தது போல் உடனடியாக 10 தேங்காய்களை இலவசமாக வழங்க வேண்டும், இரண்டு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும், அங்கன்வாடிகளில் பாமாயில் என்னைக்கு பதில் சத்தான தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட பாஜக தலைவர் கே எஸ் பாபு , மாவட்ட பார்வையாளர் பாஸ்கரன் , வாசன், ஜீவானந்தம், மாமன்ற உறுப்பினர் கயல்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்ற பின் கொட்டப்பட்டிருந்த 300க்கும் தேங்காய் சாலையில் பயணித்த பொதுமக்களுக்கும், கலந்து கொண்ட தொண்டர்களுக்கும் பாஜகவினர்களால் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரண்டு மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர்.