விடுதலை சிறுத்தைகள் கட்சியை கண்டித்து பாஜக, இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
பல நூற்றாண்டுகளைக் கடந்த சங்கர மடத்தினை இடித்து தள்ளுவோம் என கூறிய விசிக மாவட்ட செயலாளர் எழிலரசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கர மடத்தின் எதிரே கடந்த வாரம் விசிக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு இல்லாமல் இருந்திருந்தால் கூட்டத்தில் கூடியுள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் சங்கர மடத்தை அடித்து நொறுக்கி செங்கல் செங்கலாக பிரித்து விடுவோம் என விசிக காஞ்சிபுரம் மாவட்ட புறநகர் செயலாளர் எழிலரசனை பேசினார்.
இதே போல் , சனாதன தர்மமான இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி இழிவுபடுத்திய, இந்து விரோத தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் சங்கர் மடம் அருகே பாஜக மாவட்ட தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சனாதானத்தை எதிர்க்கும் இழிவுபடுத்தும் திக, திமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டனத்தை தெரிவித்தனர்.
இதில் பங்கேற்ற பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருவது கண்டிக்கத்தக்கது எனவும், பல நூற்றாண்டுகளாக இந்து தர்மத்திற்காக பாடுபட்டு வரும் சக்கர மடத்தை தகர்ப்போம் எனக் கூறியது மிகவும் கண்டிக்கத்தக்கது என மாவட்ட தலைவர் பாபு தெரிவித்தார்.