அம்மன் கோயிலுக்கு சுவாமி சிலைகள் வழங்கல்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் கிராமத்தில் உள்ள வாழவந்தல் கிராமத்தில் அமைந்துள்ள ஆளைப்பார்த்த அம்மன் திருக்கோவிலுக்கு விநாயகர் மற்றும் நாகதேவதை சிலைகள் காஞ்சி சங்கர மடத்திலிருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் , வெம்பாக்கம் தாலுக்கா , வாழவந்தல் கிராமத்தில் ஆளைப்பார்த்த அம்மன் திருக்கோயில் உள்ளது.இக்கோயில் அருகில் உள்ள வன்னிமரத்தடியில் வைத்து வழிபட விநாயகர் மற்றும் நாகர் சிலைகள் தேவைப்பட்டன.இது குறித்து காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி கோயில் சந்நிதி தெருவில் உள்ள சிவா ஸ்தபதியிடம் சிலைகளை செய்து கொள்ள அனுமதி வழங்கினார். இதனையடுத்து தயாரிக்கப்பட்ட சிலைகள் இன்று விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியுடன் ஆளைப்பார்த்த அம்மன்கோயில் அர்ச்சகர் வெங்கடேசன், மாமண்டூர் வேலன், சக்தி கொத்தனார் மற்றும் வாழவந்தல்,மாமண்டூர் கிராம பொதுமக்களும் வந்து பெற்றுக்கொண்டனர்.முன்னதாக ஸ்தபதி அலுவலகத்தில் சிறப்பு பூஜைகளும் நடந்தன. சிலைகளைப் பெற்றுக்கொண்ட கிராமத்தினர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.