கீழ்கதிர்பூர் பகுதியில் ஆதார், குடும்ப அட்டை திருத்தம் சிறப்பு முகாம்
கீழ்கதிர்பூர் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அத்தியாவசிய பொருட்கள் பெறுதல் , ஆதார் அட்டை திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை வைத்தனர்.
HIGHLIGHTS
அடிப்படை வசதிகள் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக கீழ்கதிர்ப்பூர் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் வைத்த கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் குடும்ப அட்டை , ஆதார் அட்டை உள்ளிட்டவைகள் திருத்தம் செய்தல் குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் காஞ்சிபுரம் கோட்டம் சார்பில் கீழ்கதிர்பூர் பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
இதில் சுமார் 2,100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு தற்போது வீடு இல்லாதோர் , நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்கள் ஆகியோர் தற்போது இப்பகுதியில் குடியேறி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு குடியேறிய பொது மக்கள் அடிப்படை பொருட்களான அரிசி , சர்க்கரை உள்ளிட்டவைகளை பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்படுவதாகும், அரசு ஆதாரங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் இடம் மாறுதலால் நிராகரிக்கப்படுவதாகவும் கூறி குடும்ப அட்டை மாறுதல் , வாக்காளர் அடையாள அட்டை, உள்ளிட்டவைகளுக்கான சிறப்பு முகாம் தேவை என கடந்த சில தினங்களுக்கு முன் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் சட்டப்பேரவை ஏடுகள் குழுவினரிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் இன்று அப்பகுதியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி மேற்பார்வையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் வட்ட வழங்கல் அலுவலர் வாசுதேவன், மின்சாரத்துறை அலுவலர்கள் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் என கலந்து கொண்டு குடியிருப்பு வாசிகளின் ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டு திருத்தம் மேற்கொள்ளும் பணியை துவக்கினர்.
இதில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆதார், வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை உள்ளிட்டவைகளை நகல்களை அளித்து திருத்தங்களை மேற்கொண்டனர்.
இன்று ஒரு நாள் நடைபெறும் முகாமில் பெறப்படும் மனுக்கள் தொடர்பாக அனைத்து திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு அவர்களின் கோரிக்கை ஏற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இம்முகாமினை பயிற்சி ஆட்சியர் ஹர்த்திக்ஜெயின் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட கூடுதல் ஆட்சியர் சுமதி , வட்டாட்சியர் புவனேஸ்வர் , மின்சார வாரிய உதவி பொறியாளர் திருநாவுக்கரசு , ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி குமரேசன், கூட்டுறவுத் துறை அலுவலர் பூபாலன் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.