காஞ்சிபுரத்தில் தொடர் மழை காரணமாக 50 ஆண்டு புளியமரம் வேரோடு சாய்ந்தது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையால் ஐம்பதாண்டு பழமைவாய்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.
HIGHLIGHTS
பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மண்டல ஆய்வு நிலையம் அறிவித்திருந்தது. இதன்படி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அவ்வப்போது மிதமான மழை முதல் கன மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரத்தில் 15 மில்லி மீட்டரும் , ஸ்ரீபெரும்புதூரில் 22 மி.மீட்டரும், உத்திரமேரூர் 69 மி.மீட்டரும், வாலாஜாபாத்தில் இரண்டு மி.மீட்டரும், செம்பரம்பாக்கம் பகுதியில் 66 மி. மீட்டரும், குன்றத்தூரில் 62 மி.மீட்டர் என மழை பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் பகுதியில் நேற்று மாவட்ட அளவில் அதிக கன மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 381 ஏரிகளில், ஆறு ஏரிகள் முழு கொள்ளளவையும் , 20 ஏரிகள் 75 சதவீதத்தையும், 83 ஏரிகள் 50 சதவீதத்தையும் , 209 ஏரிகள் 50 சதவீதத்தையும் கீழ் , 63 ஏரிகள் 20% நீர் நிறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பெய்த கன மழை காரணமாக 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
நேற்று நள்ளிரவில் தொடர்ந்து சாரல் மழை பெய்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் 50 ஆண்டுகள் பழமையான புளிய மரம் வேரோடு சாய்ந்து சாலை மற்றும் கடையின் மேற்கூரை முன்பு விழுந்தது. இதன் காரணமாக அருகில் இருந்த 3 இருசக்கர வாகனங்கள், 5 கடைகளின் முன் பகுதிகள் சேதம் அடைந்துள்ளது.
மேலும் தீயணைப்பு வீரர்கள் உடனே அப்பகுதியில் உள்ள புளிய மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வந்தவாசி - காஞ்சிபுரம் முக்கிய சாலை வழியாக செல்லும் வாகனங்கள் ஒரிக்கை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மரம் விழும்போது அருகில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேர செயல்பாட்டிற்கு பின் போக்குவரத்து சீரானது. இந்நிலையில் இன்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை மண்டலம் அறிவித்தது தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையினர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்க வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
காலாண்டு விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் நீர் தேங்காமலும் , மின் சாதன பொருட்களின் மின்கசிவு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.