காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அதிகாலை சந்தேகத்திற்குரிய வாலிபரிடம் 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் இரவு 11மணி வரையிலும், அதேபோல் அதிகாலை 2 மணியிலிருந்தும் வெளிமாவட்ட பேருந்துகள் வந்து செல்லும்.
சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை காவல்துறையினர் பாதுகாப்பு கருதி வலம் வருவது வழக்கம்.
இந்நிலையில், இன்று அதிகாலை சிவகாஞ்சி காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டபோது, வேலூர் மற்றும் திருச்சி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர் கையில் பையுடன் இருந்ததைக் கண்டு காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, மதுரையை சேர்ந்த நபர் என்பதும் அவர் பெயர் ஓச்சப்பன் எனவும் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது கஞ்சா பார்சல் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த நபரை சில காஞ்சி காவல் நிலையத்தில் வைத்து யாரிடம் கொடுத்து வந்தார்? எங்கிருந்து இந்த பார்சல் கொண்டுவரப்பட்டது? என்பது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.