நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி
பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை பொது மேலாளர் ரவிரஞ்சன்சின்ஹா தலைமையில் 192 நெசவாளர்களுக்கு இரண்டு கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டது
HIGHLIGHTS
இந்தியாவின் முதன்மை வங்கியாக திகழும் பாரத ஸ்டேட் வங்கி 48 கோடி வாடிக்கையாளரை கொண்டுள்ளது. அவ்வகையில் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில் நெசவாளர்கள் அதிக அளவில் வங்கிக் கணக்குகள் வைத்துள்ளனர்.
மேலும் மத்திய அரசின் முத்ரா திட்டத்திற்கு நெசவாளர்களுக்கு கடன் வழங்கி அதன் மூலம் அவர்கள் மூலப் பொருட்கள் மற்றும் நெசவு உபகரணங்கள் பெற்று உற்பத்தி திறன் அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் அதற்கு 300க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் விண்ணப்பத்தின் நிலையில் 192 நெசவாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சுமார் 2 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கும் விழா காஞ்சிபுரம் தனியார் விடுதியில் முதன்மை பொது மேலாளர் ரவி ரஞ்சன் சின்ஹா தலைமையில் நடைபெற்று நெசவாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய முதன்மை பொது மேலாளர் ரவி ரஞ்சன் சின்ஹா , நெசவு தொழிலை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வரும் நிலையில் அதற்கு தேவையான நிதி உதவிகளை பாரத ஸ்டேட் வங்கி கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேர்வு செய்து அவர்களுக்கு கடன் உதவி வழங்கி வருகிறது.
மேலும் 300 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் விரைவில் வழங்கப்பட உள்ளது. இது மட்டும் இல்லாது சாலை ஓர வியாபாரிகளுக்கு சிறு வணிக கடன் வழங்க மாநகராட்சியின் அங்கீகாரத்துடன் வங்கியில் விண்ணப்பித்து கடன் பெற்று வியாபார பெருக்கத்தையும், வாழ்வாதாரத்தையும் முன்னேற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் மோனிகண்டன், காஞ்சிபுரம் கிளை முதன்மை மேலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட பல்வேறு கிளை மேலாளர்கள் நெசவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.