தொடர் வேலையின்மை - சகோதரர்கள் தற்கொலை
காஞ்சிபுரத்தில் தொடர் வேலையின்மை காரணமாக சகோதரர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த செட்டியார் பேட்டை பகுதியினை சேர்ந்தவர்கள் வினோத்குமார் மற்றும் சதீஷ்குமார். இருவரும் ஆட்டோ மெக்கானிக் தொழிலை இணைந்து செய்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சதீஷ்குமாரின் மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக தனது தாய் வீட்டுக்கு சென்று உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தங்களது சொத்து தகராறு காரணமாக 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர் பிரச்சனை இருந்ததாலும்,கொரோனா காலத்தில் தொடர் வேலையின்மை காரணத்தாலும் அதிக மன உளைச்சலில் இருவரும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலை 6 மணியளவில் வினோத்குமார் மனைவி எதிர் வீட்டுக்கு சென்று இருந்த நிலையில் வினோத்குமார், சதீஷ்குமார் 2 பேரும் வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சிறிது நேரம் கழித்து வந்த அவரது மனைவி நீண்ட நேரம் அழைத்தும் 2 பேரும் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் இறந்த நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அலறியடித்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்களை இறக்கி காவல்துறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.