கரும்பு ஆலையில் கலப்படம் செய்ய வைத்திருந்த 225 சர்க்கரை மூட்டைகள் பறிமுதல்
கரும்பு ஆலைகளில் இருந்து 11 டன் அளவிற்கு கலப்படம் செய்ய வைத்திருந்த சர்க்கரை மூட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது.
HIGHLIGHTS
பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி கிராமத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கரும்பு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. தைப்பொங்கல் நெருங்கி வரும் நிலையில் கரும்பு ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரும்பு ஆலைகளில் வெல்லம் தயாரிப்பின் போது சீனி மூட்டைகளை பயன்படுத்தி கலப்படம் செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரி சரவணகுமாருக்கு புகார் வந்துள்ளது.
இதனையடுத்து பாப்பம்பட்டியில் உள்ள கரும்பு ஆலைகளில் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி சரவணக்குமார் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ராஜன் மற்றும் ராமர் என்பவர்களுக்கு சொந்தமான கரும்பு ஆலைகளில் சோதனை செய்தபோது வெல்லம் தயாரிக்கும்போது கலப்படம் செய்ய 50 மூட்டைகளில் சர்க்கரை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நெய்க்காரப்பட்டி யைச் சேர்ந்த நசீர் என்பவர் கலப்படம் செய்ய வைத்திருந்த 173 மூட்டை சர்க்கரையையும் உணவு பாதுகாப்பு அதிகாரி பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைத்தனர். பழனியில் ஒரே நாளில் திடீர் சோதனை மேற்கொண்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கரும்பு ஆலைகளில் இருந்து 11 டன் அளவிற்கு கலப்படம் செய்ய வைத்திருந்த சர்க்கரை மூட்டைகளை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.