திண்டுக்கல்லில் தடையைமீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை: இந்து அமைப்பினர் அறிவிப்பு
அரசின் கொரோனாகட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி கொண்டாட இந்து அமைப்புகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது
HIGHLIGHTS
திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பு நிர்வாகிகளுடன், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி ஆலோசனை நடத்திய பின்னர், தடையை மீறி விநாயகர் சிலை வைக்கப் போவதாக இந்து அமைப்பினர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து அமைப்பு நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் சீலபாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட எஸ். பி.சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் , விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொதுமக்கள், இந்து அமைப்புகள் கடைபிடிக்க வேண்டிய, வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அரசின் கட்டுப்பாட்டு விதிகளை பின் பற்றி கொண்டாட வேண்டும். இதற்கு, இந்து அமைப்புகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கூட்டத்தில் போலீசார் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில், திருப்தி அடையாத இந்து அமைப்பைச் சார்ந்த பாலாஜி (சிவசேனா) என்பவர் , விநாயகர் சதுர்த்தி (10.09.2021) அன்று அரசின் உத்தரவை மீறி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்போவதாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது .