சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் திரண்ட மினி கிளினிக் டாக்டர்கள்
ஜனவரி மாதம் முதல் சம்பளம் வழங்கவில்லை என கூறி சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் அரசு கிளினிக் டாக்டர்கள் திரண்டனர்
HIGHLIGHTS
கடலூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் அரசு மினி கிளினிக்கில் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு, தடுப்பூசி போடும் பணி, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் கடந்த ஜனவரி மாதம் முதல்அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் வருகிற மார்ச் 31- ந் தேதிக்கு பிறகு அவர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக செய்திகள் வெளியானது.
இதனை தொடர்ந்து, கடலூர் கடற்கரை சாலையில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் இன்று கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு கிளினிக் டாக்டர்கள் திரண்டனர். மார்ச் 31-ந் தேதிக்குள் நிலுவையில் உள்ள சம்பள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.