கடலூரில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடக்கம்
கடலூரில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி இன்று தொடங்கியது.
HIGHLIGHTS
கொரோனா தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் 18-வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 சதவீதம் பேருக்கு ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பின் வீரியம் குறைவாக இருப்பதற்கு தடுப்பூசியே முக்கிய காரணியாக உள்ளதாக சுகாதார நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். இதனால், தடுப்பூசி செலுத்தும் பணியில் மத்திய மாநில அரசுகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் 12 முதல் 14 வயது வரம்பில் உள்ள சிறார்களுக்கு இன்றுமுதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் கடலூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள 12 வயது முதல் 14 வயது உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதனை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தனர். கடலூர் மாவட்டத்தில் 76 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
2010 ஆம் ஆண்டு பிறந்த சிறுவர்கள், தடுப்பூசி போடும் நாளில் 12 வயதை எட்டியிருக்க வேண்டும் என்றும், ஒருவேளை 12 வயதை எட்டியிருக்கவில்லை என்றால் முன்பதிவு செய்திருந்தாலும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்ட மையங்களில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் எனவும், முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு 28 நாட்கள் இடைவெளிக்கு பிறகு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது