கோவிலுக்கு கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
HIGHLIGHTS
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சாத்தநத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி இவரின் மகன் செந்தில்குமார் என்கிற அசோக்குமார்(33), இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணமாகி செல்லக்கிளி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் செந்தில்குமார் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி வந்து உள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறிய நிலையில் அதை அந்த சிறுமி மறுத்து உள்ளார். இருப்பினும் செந்தில்குமார், அவரது மனைவி செல்லக்கிளி ஆகிய 2 பேரும் அந்த சிறுமியை அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு 9.11.2019 அன்று கடத்திச்சென்று. பின்னர் அங்கு சென்றதும் அந்த சிறுமிக்கு செந்தில்குமார் வலுக்கட்டாயமாக தாலி கட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது பற்றி அந்த சிறுமி விருத்தாசலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமார், செல்லக்கிளி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதற்கிடையில் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த சிறுமி கர்ப்பிணியாகி, ஒரு ஆண் குழந்தையும் பிறந்து விட்டது. இந்த நிலையில் இந்த வழக்கானது, கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவு அடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி இந்த வழக்கிற்கு தீர்ப்பு கூறினார்.
அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் செந்தில்குமார் என்ற அசோக்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.மேலும் அவரது மனைவி செல்லக்கிளி மீதான குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தினால் எனவே அவரை விடுதலை செய்து தீர்ப்பு கூறினார்.
இது மட்டும் இன்றி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலம் 30 நாட்களுக்குள் ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும், செந்தில்குமார் என்ற அசோக்குமாரின் 3 பெண்குழந்தைகளின் எதிர்காலம், அவர்களின் படிப்பு செலவுக்காக தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளில் ஏதேனும் ஒரு உதவியை செய்யலாம் என்றும் அவர் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.