பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள் 3வது நாளாக ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரி கட்சியினர், 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக, மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, மூன்றாம் நாளான இன்று, கோவை தொகுதி எம்.பி பி.ஆர்.நடராஜன் தலைமையில், இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகரித்து வரும் பெட்ரோல்,டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், விலைவாசிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், போதிய தடுப்பூசிகளை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி , இதில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் பி.ஆர் நடராஜன், மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற போது பெட்ரோல் டீசல் என்ன விலையோ, அதே விலைக்கு விற்பனை செய்யபட வேண்டும். மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். கொரோனா நிதியாக குடும்பங்களுக்கு 7500 வழங்கிட வேண்டும் என்றார்.