கட்சி கம்பங்களில் தேசியக்கொடி; உடனடியாக அகற்றிய போலீசார்
கோவையில், கட்சி கொடிகளுக்கு கீழ் கட்டப்பட்டிருந்த தேசியக்கொடிகளை, போலீசார் உடனடியாக அகற்றினர்.
HIGHLIGHTS
நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களுக்கு அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடுமாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று முதல் மக்கள், தங்களது இல்லங்களில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர். பல்வேறு கட்சியினரும் அவர்களது அலுவலகத்தில், தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.
இந்த ஆண்டு சுதந்திர தினவிழா விமரிசையாக கொண்டாடுவதற்காக தேசியக்கொடி ஏற்றுவதில், விதிகளுக்கு உட்பட்டு திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. தேசியக்கொடியை தனி கம்பத்தில்தான் ஏற்ற வேண்டும்; கட்சி கம்பங்களில் ஏற்ற கூடாது என விதி இருக்கும் போது, கோவை ஒலம்பஸ் பகுதியில் அதிமுக கொடி கம்பத்தில், கட்சி கொடிக்கு கீழ் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ள்து. அதிமுக கட்சி கொடி மேலேயும், தேசியக்கொடி கீழேயும் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே இந்து அமைப்பின் கொடி கம்பத்திலும் இந்து அமைப்பின் கட்சி கொடிக்கு கீழ், தேசியக் கொடி கட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து, அங்கு சென்ற போலீசார், தேசியக்கொடியை கட்சி கம்பத்தில் இருந்து உடனடியாக அகற்றினர்.