அம்மா உணவகம் செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: கமல்
தமிழகத்தில், அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுவதை, அரசு உறுதி செய்ய வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், நடிகர் கமலஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
HIGHLIGHTS
இது தொடர்பாக, கமல் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏழை எளியவர்களின் பசியாற்று மையங்களாகத் திகழ்கின்றன அம்மா உணவகங்கள். இங்கே மலிவு விலையில் வழங்கப்படும் உணவுகளை, நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை, கொரோனாவிற்கு பிறகு பன்மடங்கு பெருகியுள்ளது.
அம்மா உணவகங்களால் ஈர்க்கப்பட்டு, பிற மாநிலங்களிலும் செயல்படுத்த சில அரசுகள் முயன்றுவருகின்றன. திமுக அரசும் அம்மா உணவகங்களை கைவிடும் எண்ணமில்லை என அறிவித்திருந்தது. எனினும், சென்னையில் அம்மா உணவகங்களில் இரவு நேர உணவு முறையில் மாற்றம் செய்துள்ளதாகவும், பணியாட்களை குறைத்து வருவதாகவும் வெளியாகும் தகவல்கள் கவலையளிக்கின்றன.
இந்நடைமுறை மாற்றங்களுக்கு, அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்குவதே காரணம் என்கிறார்கள். சென்னை மாநகராட்சி தன் வருவாயை பெருக்கிக் கொள்ள பல வழிகள் இருக்கையில், சிறிய இழப்பை காரணம் காட்டி, நல்ல திட்டங்களை சிதைப்பது, மக்கள் நலன் நாடும் அரசுக்கு அழகல்ல.
எனவே, அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாக செயல்படுவதை தமிழக அரசும், முதல்வரும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, கமல் கேட்டுக் கொண்டுள்ளார்.