வாக்காளர்களை மிரட்டி வாக்கு சேகரிப்பு- அதிமுக மீது புகார்
திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்போரூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் அதிமுக மற்றும் பாமக கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து மிரட்டி வாக்கு சேகரித்ததாக திமுக சார்பில் திருப்போரூர் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேதி 6ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணி கட்சியான பாமகவினர் கடந்த 5ஆம் தேதி மாலை திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் அதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சிவராமன் தலைமையில் குமரன், முருகவேல், பன்னீர்செல்வம், அர்ச்சகர் விஜயன், பாமகவை சேர்ந்த பூபாலன், பிரகாஷ், நந்தகுமார், பாபு ஆகியோர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது அவர்களுடைய கட்சி கொடியுடன் சென்று அனைத்து வாக்காளர்களுக்கும் பணம் கொடுத்து பாமக சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறியதாக திமுக சார்பில் திருப்போரூர் தேர்தல் அலுவலர் சுப்ரமணியனிடம் புகார் அளித்துள்ளனர். பாமகவினருடன் இணைந்து அதிமுகவினரும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராகவும் செயல்பட்டவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை வைத்துள்ளனர்.