தாம்பரம் அருகே நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்
தாம்பரம் அருகே, ரோட்டில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
சென்னை, தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலை, திருநீர்மலை அருகே ரோட்டில் சென்று கொண்டிருந்த சொகுசு காரின் முன் பகுதியில் இருந்து, திடீரென புகை வரத்துவங்கியது. உடனடியாக சுதாரித்த கார் டிரைவர் சதீஷ், காரை ரோட்டோரத்தில் நிறுத்திவிட்டு அவரும், காரில் உடன் பயணித்த பிரதீப் என்பவரும் காரில் இருந்து இறங்கி ஓடினர்.
சிறிது நேரத்தில் புகை தீயாக மாறி, பற்றி எரிய துவங்கியது, உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைப்பதற்குள், கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதனால் மதுரவாயல் புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விசாரணையில் காரைக்குடியில் இருந்து, நொளம்பூரில் உள்ள அக்கா வீட்டிற்கு வந்ததாகவும், இன்று வண்டலூர் செல்ல காரில் வந்த போது தீ விபத்து ஏற்பட்டதாகவும், காரில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.