குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை கண்டறிய விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை அதிகரிக்க சக்தி வாகன் விழிப்புணர்வு வாகனத்தினை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் 1 முதல் 6 வயது குழந்தைகளுக்கான எடை, உயரம் மற்றும் அவர்களது வளர்ச்சி கண்காணிக்க சூரிய ஒளி ஆற்றலில் இயங்கும் சக்தி வாகன் விழிப்புணர்வு வாகனத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் 1 முதல் 6 வயது குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குள்ளதன்மை அதிகமாக காணப்படுகிறது. மேலும் ஊட்டச்சத்து நிலையை அதிகப்படுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சூரிய ஒளி ஆற்றலில் இயங்கும் சக்தி வாகன் விழிப்புணர்வு வாகனம் தயார் செயய்ப்பட்டுள்ளது. மேலும் இவ்வாகனத்தின் மூலம் 1 முதல் 6 வயது குழந்தைகள், கர்ப்பிணிபெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்இனப்பெண்கள் மற்றும் வளர்இன ஆண்கள் ஆகியோர் அவர்களின் ஊட்டச்சத்து நிலையை அறிந்துகொள்ளலாம்.
மேலும், இவ்வாகனத்தில் எடைக்கு தகுந்தவாறு, எடை அதிகரிக்க மற்றும் குறைக்க, இரும்பு சத்து உணவுகள், கால்சியம் நிறைந்த உணவுகள், போலிக்ஆசிட் நிறைந்த உணவுகள் போன்ற ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் பொறுத்தப்பட்டுள்ளது. இவ்வாகனம் தமிழகத்தில் முதல்முறையாக அரியலூர் மாவட்டத்தில் தயார் செய்யப்பட்டு, அரியலூர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட பயனாளிகளுக்கு பயன்பெறும் வகையில் இவ்வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாகனத்தினால் எந்தவொரு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது.
பொதுமக்கள் இவ்வாகனத்தினை பயன்படுத்தி 1 முதல் 6 வயது குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் அவர்களது வளர்ச்சி அறிந்து, ஊட்டச்சத்து நிலையை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், ஒன்றியக்குழுத்தலைவர் சுமதிஅசோகசக்கரவர்த்தி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் சாவித்ரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.ப.பாலசுப்ரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசி, யசோதாதேவி, மாவட்ட திட்ட உதவியாளர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.