அரியலூர்: வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம் அரியலூர் மாவட்ட கண்காணிப்புஅலுவலர் அனில்மேஸ்ரா ம் தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஸ்ராம் தலைமையில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது.
மழைக்காலங்களில் சேதமாகும் சாலைகளை சீரமைக்கும் வகையில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் மின் அறுவை இயந்திரங்கள் மற்றும் வெள்ளநீர் உட்புகாத வகையில் தேவையான அளவு மணல் மூட்டைகள் கையிருப்பு குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார். தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை தங்க வைப்பதற்கான இடங்கள் குறித்து கேட்டறிந்து, கூட்டுறவுத் துறையின் சார்பில் தேவையான அளவு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் தேவையான அளவு கையிருப்பு வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
மழைக்காலங்களில் பொதுமக்கள் மற்றும் விளைநிலங்கள் பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுபாட்டில் உள்ள 100 சதவீதம் நீர் நிரம்பிய 181 ஏரி, குளங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும், மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களும் தொடர்ந்து பணியில் ஈடுபட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தினார்.
வடக்கிழக்கு பருவமழையின் போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள மாவடட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தினை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329-228709 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவித்திட வேண்டும். மேலும், பொதுமக்கள் பேரிடர் தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் புகார்கள் TNSMART என்ற செயலி மூலம் தெரிவிக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஸ்ராம் தெரிவித்தார்.
இந்த ஆய்வு கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.