அரியலூர் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து கொள்ள வேளாண் அதிகாரி அழைப்பு
அரியலூர் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து சமசீர் உரமிட்டு அதிக லாபம் பெற வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
நடப்பு ஆண்டில் பயிர் சாகுபடி ஆரம்பிப்பதற்கு முன் மண் பரிசோதனை செய்து மண்ணில் இருக்கும் ஊட்ட சத்துகளின் நிலவரத்தினை அறிந்து மண் பரிசோதனை மூலம் கிடைத்த தகவல்களை கொண்டு சமச்சீர் உரமிட்டு அதிக லாபம் பெறலாம் என்று அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
மண்ணின் வளத்தை பேனி காப்பதற்கு தேவையான அளவு அங்கக உரங்கள் இடவேண்டும், பயிரின் தேவை மற்றும் மண்ணின் தன்மையை கருத்தில் கொண்டு உர நிர்வாகம் செய்திட மண்பரிசோதனை செய்வது அவசியம். மண்மாதிரி எடுக்கும் போது, ஆங்கில எழுத்து "ஏ" போல் மண் வெட்டியால் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை நீக்கிவிட வேண்டும் பிறகு நிலத்தில் கொழு ஆழம் 15 செமீ வரை மண்மாதிரி சேகரிக்க வேண்டும்.
நுண்ணூட்டங்களை அறிய பிளாஸ்டிக் குறுப்பி மூலம் மண்மாதிரி எடுக்க வேண்டும். இவ்வாறு சேகரித்த மாதிரிகளை நன்றாக கலந்து கால் பங்கீட்டு முறையில் ஆய்வுக்கு 1:2 கிலோ மண் மாதிரியை மண்பரிசோதனை நிலையத்திற்க்கு தரவேண்டும் என வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி கூறினார்.
வாலாஜாநகரம் கிராமத்தில் மண்மாதிரி சேகரம் செய்யும் செய்முறை விளக்கத்தினை அரியலூர் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் தேவியும், மண்மாதிரியை சேகரம் செய்து மண்பரிசோதனை நிலைய உதவி வேளாண்மை அலுவலர் கமலாவும் செய்து காண்பித்தனர்.
தற்போது பெய்து வரும் கோடை மழை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் கோடை உழவு செய்தும் மண்மாதிரி சேகரித்து மண்பரிசோதனை நிலையம் வாலாஜாநகரத்தில் உள்ள ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்து மண்வள அட்டையில் உள்ள விபரப்படி சாகுபடி செய்து பயனடையுமாறு அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.