/* */

பூலோக கைலாயம்..தில்லை அம்பல நடராஜர் கோவில் வரலாறு அறிவோம் வாருங்கள்..!

Chidambaram History in Tamil-பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் சிதம்பரம் நடராஜர் கோவில் அழைக்கப்படுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் என்னும் நகரில் அமைந்துள்ளது.

HIGHLIGHTS

Chidambaram History in Tamil
X

Chidambaram History in Tamil

Chidambaram History in Tamil

சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் சமயக்குரவர் நால்வரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இந்த கோவில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் வட்டத்தில் அமைந்துள்ளது. சேந்தனார் அருள் பெற்றதும், மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், திருநீலகண்டர், திருநாளைப்போவார், கணம்புல்லநாயனார் முக்தி பெற்ற தலமாக விளங்குகிறது.

முனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவினரான மத்யந்தினர் என்ற முனிவருக்கு மாத்யந்தினர் என்ற ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு "ஆன்மஞானம் கிடைக்கவேண்டுமெனில் தில்லை வனக்காட்டில் உள்ள சுயம்பு லிங்கத்தை வணங்குமாறு" முனிவர் அவரிடம் கூறினார். இதையடுத்து மாத்யந்தினர் தில்லை வனம் வந்தடைந்தார். அங்குள்ள லிங்கத்தை தினமும் பூஜை செய்தார். பூஜைக்கு தேவையான மலர்களை, பொழுது விடிந்த பிறகு எடுத்தால் தம் பூஜை, தவம் முதலியவற்றிற்கு போதாமையாலும் மலர்களின் தேனை வண்டுகள் எடுப்பதால் அந்த மலர்கள் பூஜைக்கு உகந்ததாக இல்லாமல் போய்விடுவதாகவும் வருந்தினார்.

இக்குறையை சுவாமியிடம் முறையிட்டார். சுவாமி தங்களின் பூஜைக்காக பொழுது விடியும் முன் மலர்களைப் பறிக்க செல்கிறேன் ஆனால் எனக்கு இருட்டில் மலர்கள் தெரியவில்லை.

"பொழுது விடிந்த பின்னர் மலர்களைப் பறிக்கலாம் என்றால் மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுத்துவிடுகின்றன. அதனால், பூஜைக்கு நல்ல மலர்கள் கிடைக்காமல் போகின்றன என்று சுவாமியிடம் கூறினார்.

உடனே சுவாமி மரங்களில் ஏறுவதற்கு வசதியாக வழுக்காமல் இருக்கப் புலியினுடைய கை கால்கள் போன்ற உறுப்புகளும், இருளிலும் நன்றாகத் தெரியும்படியான கண்பார்வையும் உனக்கு கொடுத்தோம் என்று கூறியருளினார். மேலும் புலிக்கால், புலிக்கைகளைப் பெற்றதால் உன் பெயரும் வியாக்கிரபாதன் என்றும் பெயர் பெறுவாய் என்று கூறினார். மாத்யந்தினரும் பெருமகிழ்வு கொண்டு தினமும் மனநிறைவோடு பூஜை செய்து வந்தார் என தல வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன..

இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் தில்லை எனப்பெயர் பெற்றது. ஆனால் தில்லை மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் இல்லை என்பது கூடுதல் தகவல். சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன. கோவிலுக்குள் திருமூலட்டானக் கோவில் மேற்கு பிரகாரத்தின் மேல்பகுதியில் இருக்கின்றது. இது கருங்கல் வடிவத்தில் செய்து வைக்கப்பட்டுள்ளது. நடராஜர் சன்னதியின் எதிரில் உள்ள மண்டத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் தரிசிக்கலாம்.

Chidambaram History in Tamil

கோவிலின் சிறப்பு:

இங்கு மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி. பஞ்ச பூத தலங்களில் இது ஆகாயம் தலம் ஆகும். மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இதுவே ஆகும். சைவ சமயத்தில் பொதுவாக கோவில் என்று சொன்னாலே அது சிதம்பரம் கோவிலைத்தான் குறிக்கும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது முதல் தேவாரத்தலம் ஆகும்.

இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் காட்சி தருகிறார். நடராஜர் சன்னதி அருகிலேயே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாள் தலம் இருப்பது விசேஷத்திலும் விசேஷ கருதப்படுகிறது. சிவனுக்கும், சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், ஆடிய தில்லை காளி கோவில், நடராஜர் கோவில் அருகிலேயே உள்ளது. 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான சிவ தலம் இதுவேயாகும். கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த கோவில் அமைந்துள்ளது. நடராஜரின் பஞ்ச சபைகளில் இது சிற்றம்பலம்.

இக்கோவிலில் இறைவனின் ஐந்து சபைகளாக (பஞ்ச சபை எனப்படுகிறது) 1. சிற்றம்பலம் 2. பொன்னம்பலம் (கனகசபை) 3. பேரம்பலம் 4. நிருத்தசபை 5. இராசசபை என ஐந்து மன்றங்கள் உள்ளன.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா போன்ற இவைகள் ஆகும்.

இந்த ஊரில் தேரோடும் வீதிகளில் அப்பர் பெருமான் அங்கப்பிரதட்சணமே செய்தாராம். இலங்கையில் வாழ்ந்த புத்தமதத்தைச் சேர்ந்த மன்னனின் ஊமை மகளை மாணிக்கவாசர், நடராஜர் அருளால் பேசச் செய்த தலம் சிறப்பும் பெற்றது. இத்திருக்கோவிலில் சிவனின் ஐந்து மன்றங்களும் அமைந்திருப்பது, சிவன், விஷ்ணு என இருவர் சந்நிதிகளும் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி அமைந்திருப்பது போன்றவை இக்கோவிலின் தனிச் சிறப்புகளாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டுள்ள திருத்தலமாகவும் விளங்குகிறது. இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோவில் என்றதும் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைப்பார்கள். கோவிலுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதியை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள்தருகிறார்.. பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் காணவேண்டும் என்று விரும்பினர். எனவே, இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்தனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், திரிசகஸ்ர முனீஸ்வரர்கள் என்போரை கயிலையிலிருந்து, சிதம்பரத்திற்கு வரவழைத்து தைமாதம் பூசத்தில் பகல் 12 மணிக்கு நாட்டிய தரிசனம் தந்தார். இந்த திரிசகஸ்ர முனிவர்களே தில்லை மூலவாரயிவர் என்றும் சொல்வதுண்டு.

ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் அம்மன் சன்னதியில் உள்ளது. அர்த்தஜாமத்தில் நடைபெறும் பூஜை இத்தலத்தின் தனி சிறப்பு. அர்த்தஜாம பூஜையில் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் கலந்து கொள்வதாக ஐதீகம். அப்பர் இதை 'புலியூர் (சிதம்பரம்) சிற்றம்பலமே புக்கார் தாமே' எனப்பாடுகிறார். சேக்கிழார் இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தான் பெரியபுராணம் பாடி அரங்கேற்றினார். அருணகிரிநாதர் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்ட தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர்.

சிதம்பர ரகசியம்

சிதம்பர ரகசியம் என்று அடிக்கடி சொல்வதை கேட்டிருப்போம் அந்த ரகசியம் என்ன? சித் + அம்பரம் = சிதம்பரம். சித் = அறிவு, அம்பரம் = வெட்டவெளி. மனிதனே.. உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள். சித்ர சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரையை,அகற்றி ஆரத்தி காட்டப் படும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இருக்காது. தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று மட்டுமே காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது. முடிவும் கிடையாது. அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாக விளங்குகிறது. சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்ரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து, ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உண்டு. இந்த சக்ரத்தில் நடராஜப்பெருமான் ஐக்யமாகி, தன் ஆனந்த நடனத்தால் உலகை படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளிக் கொண்டிருக்கிறார்.

தேவாரம் கிடைத்த தலம்: மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. திருநாரையூரைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி என்பவரும் திருமுறை கண்ட சோழ மன்னனும் திருநாரையூர் தலத்தில் உள்ள பொல்லாப்பிள்ளையாரை வணங்கி அப்பெருமானுடைய திருவருளால் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் அருகே மூவர் திருக்கர முத்திரைகளோடு தேவார ஏடுகள் உள்ளன என்று அறிந்தனர். பின்பு தில்லையை வந்தடைந்து மூவருக்கும் விழா எடுத்து குறிப்பிட்ட இடத்தில் தேடும்போது கறையான் புற்று மூடிக்கிடக்க ஏடுகள் கிடந்தன.

பின்னர் எண்ணெய் விட்டு புற்றினுள்ளே இருந்த சுவடிகளை எடுத்துப் பார்த்தபோது பல பகுதிகள் கறையானுக்கு இறையாகிப் போயிருந்தன. அங்கு கரையான் அரிக்காமல் கிடந்த சுவடிகளை எடுத்து பத்திரப்படுத்தினர். இவ்வாறு கிடைக்கப்பெற்றதே தற்போது நாம் படிக்கும் தேவாரப் பதிகங்கள். அத்தகைய அரிய தேவாரப்பதிகங்கள் கிடைத்த தலம் இதுவே ஆகும். திருநாளைப்போவார் என்று அழைக்கப்பட்ட நந்தனார் சிவன்பாதம் அடைய அக்னி குண்டத்தில் இறங்கிய அருந்தவத் தலம்.

முக்தி பெறும் தலம்

திருவாரூரில் பிறந்தால் முக்தி. காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. உயிர் போகும் நேரத்தில் நினைக்க அருள்புரிவாய் அருணாச்சலா என அப்பர் கூறியுள்ளார். இதுபோல், வாழ்நாளில் ஒரு தடவையேனும் நடராஜரையும், திருமூலநாதரையும் தரிசித்தால் முக்தி கிடைத்து விடும். எனவே, தான் நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால், சர்வ மரியாதையுடன் கோவிலுக்குள் சென்று நடராஜருடன் ஐக்கியமானார், நந்தனார்.

தேரில் பவனி வரும் நடராஜர்:

மூலவரே வீதிவலம் வருவது இங்கு மட்டுமே. இத்தலத்து நடராஜரைக் காண உலகமே திரண்டு வருவதும் வழக்கம். ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட, நடராஜரின் சிற்பச் சிறப்பைக் காண வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருவதை பக்தர்கள் காணலாம்.

அர்த்த ஜாம பூஜை :

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில், சங்கூதிப் பிள்ளையாருக்கு வலது புறத்தில், அர்த்தஜாம அழகர் கோவில் கொண்டுள்ளார். இரவு பத்து மணி அளவில் நடக்கும் அர்த்தஜாம பூஜையில் ஸ்ரீ நடராஜர், பள்ளியறை தீபாராதனைகளைத் தொடர்ந்து, நிறைவாக அர்த்தஜாம அழகர் எனும் இத்திருக்கோலத்திற்கு மஹா தீபாராதனையோடு அன்றைய பூஜைகள் நிறைவுறும். அமர்ந்த வடிவில், தூக்கிய இடது கையும், வலது கையில் கதை ஆயுதமும், பெயருக்கு ஏற்றார் போல் மிக மிக அழகிய வடிவில் அருள்கிறார்.

உடலமைப்பில் சன்னதி:

மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாச மூச்சுகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது. கோவிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது. இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச(5) பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நேர்த்திக்கடன் செய்யும் முறை

பால், பழம், பொரி முதலியவற்றை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்து, சுவாமியின் பாதுகையை வெள்ளி தங்கப்பல்லக்கில் எழுந்தருளச் செய்து கொண்டு வந்து நடராஜரின் அருகில் வைத்து நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியவை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்வதை திருவனந்தல் என்றும் பால் நைவேத்தியம் என்றும் அழைக்கின்றனர்.

இதை பக்தர்கள் தங்களின் கட்டளையாக ஏற்று செய்யலாம். சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். உண்டியல் காணிக்ககை செலுத்தலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

பிரார்த்தனை: இங்குள்ள ஈசனை வழிபடுவோருக்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தமான எந்த நோயாக இருப்பினும் குணமாகிறது. கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர் இத்தலத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவர் விரும்பிய வண்ணம் சிறப்பான எதிர் காலம் அமையும் என்பது நம்பிக்கை. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்வது வழக்கமாக உள்ளது.

மார்கழி திருவிழா 10 நாள் திருவிழாவாக நடக்கிறது. திருவாதிரை உற்சவம் இத்தலத்தில் மிக விசேசமாக நடக்கும். திருவாதிரை நட்சத்திரத்திற்கு முன் கொடி ஏற்றி பத்து நாள் விழா நடைபெறும். இத்திருவிழாவில் மாணிக்கவாசரை எழுந்தருளச் செய்வது தனி சிறப்பாகும். பத்து நாட்களிலும் சாயங்கால தீபாராதனையின் போது மாணிக்கவாசகரை சுவாமியின் சன்னதிக்கு எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாடிச் சுவாமிக்குத் தீபாராதனை நடைபெறும். நாள்தோறும் காலை விழாவில் மாணிக்கவாசகரையும் எழுந்தருளச் செய்வதுடன் 10 ஆம் நாள் தரிசனம் முடிந்தவுடன் மாணிக்கவாசகருக்கும் தீபாரதனை நடைபெறும். சுவாமிக்கு விடையாத்தித் திருவிழா முடிந்த மறுநாள் மாணிக்கவாசகருக்கும் விடையாத்தித் திருவிழா நடைபெறும்.

ஆனித் திருமஞ்சனம்,10 நாள் திருவிழாவாகும். ஆனி உத்திர நட்சத்திரத்திற்குப் பத்துநாள் முன் கொடிஏற்றி முதல்நாள் திருவிழா முதலாக எட்டாந்திருவிழா வரையில் உற்சவ மூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, விநாயகர் , சுப்பிரமணியர், சண்டேசுவரர் முதலிய பஞ்சமூர்த்திகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் வீதியுலா வருவார்கள். ஒருநாள் வெள்ளி, ஒருநாள் தங்க வாகனம் என வீதியுலா வருவார்கள். சித்திரை வருடப்பிறப்பு, திருவாதிரை நட்சத்திரம், அமாவாசை முதலிய விசேச நாட்களில் நடராஜமூர்த்தி சிவகங்கையில் தீர்த்தம் கொடுத்தருள்வார். மற்ற மாதங்களிலும் இவ்வாறு தீர்த்தம் கொடுத்தருள்வார். சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரு மாதங்களில் மாதப்பிறப்பு, பிரதோசம், வெள்ளிக்கிழமை, திருவாதிரை, கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் இரவு விழா நடைபெறும்.

திருப்பாவாடை உற்சவம்: சிதம்பரம் திருத்தலத்தில் நடைபெறுகின்ற பல உற்சவங்களுள் தைப்பூசத்திருநாளில் நடைபெறும் திருப்பாவாடை உற்சவமும் ஒன்று. இதற்கென்று ஒரு சாசனமும் எழுதப்பட்டுள்ளது. இந்த சாசனத்தில் திருப்பாவாடை உற்சவத்தை தைப்பூசத்தன்று விமரிசையாக நிகழ்த்துவதற்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நிலம் தானம் செய்யப்பட்டதாக பல குறிப்புகள் அதில் இருக்கின்றன.

அரிசி, பருப்பு, சர்க்கரை, தேங்காய், பலா முதலியவற்றைக் கொண்டு இனிப்புச் சுவை கொண்ட திருவமுது எனப்படும் பொங்கல் செய்து தைப்பூசத் திருப்பாவாடை வைபவத்தின்போது இறைவனுக்குப் படைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிலம் தானம் செய்யப்பட்டது. இவை யாவும் தைப்பூசத்திருநாளில் சிதம்பரம் திருத்தலத்தில் தொன்மைக் காலம் தொட்டு நடைபெற்று வரும் சிறப்பைக்காட்டுகிறது. தில்லை நடராஜரின் மகிமையால் எல்லா வளமும் நலனும் கிட்டும்.

கோவில் திறப்பு நேரம்

காலை 06.00 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 04.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 April 2024 5:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  7. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  8. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  9. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  10. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்