/* */

மறக்க முடியாத ‘உதிரிப்பூக்கள்’

காலத்தால் அழியாத காவிய திரைப்படமான உதிரிப்பூக்கள் படத்தை இயக்கியவர் மகேந்திரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

HIGHLIGHTS

மறக்க முடியாத ‘உதிரிப்பூக்கள்’
X

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் 100 நாள் 200 நாள் என ஓடினாலும் அந்த படத்தை மக்கள் ஒரு கட்டத்தில் மறந்து விடுவார்கள். ஆனால் இன்று வரை ஒரு படத்தை பாராட்டி வியந்து அந்த படத்தை அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது‘உதிரிப்பூக்கள்’ மட்டுமே.

இயக்குனர் மகேந்திரனை பல வருடங்கள் உதிரிப்பூக்கள் மகேந்திரன் என்று திரை உலகம் அழைத்தது. ஒரு அழகான கிராமத்தில் ரயிலில் சரத்பாபு தனது மனைவியுடன் வந்து இறங்குவார். அவர் அந்த கிராமத்தின் சுகாதாரத்துறை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருப்பார். அதே ஊருக்கு அதே ரயிலில் சத்யன் என்ற பள்ளி வாத்தியாரும் வருவார்.

அந்த கிராமத்தில் பெரிய மனிதராக இருக்கும் விஜயனுக்கு, பிறர் நன்றாக வாழ்ந்தால் பிடிக்காது. நல்ல சட்டை ஒருவர் போட்டாலோ, நல்ல மனைவி ஒருவருக்கு அமைந்தால் கூட பிடிக்காது. ஒரு விதமான சாடிஸ்ட் கேரக்டர் என்று சொல்லலாம்.

இந்த நிலையில் விஜயனின் மனைவியாக அஸ்வினி, அவருக்கு இரண்டு குழந்தைகள், மனைவியை எப்போதும் அவர் திட்டிக் கொண்டே இருப்பார். உங்க அப்பாவையும் தங்கச்சியும் ஊரை விட்டு போக சொல்லு என்று கூறுவார். தன்னிடம் வாங்கிய கடனை அடைக்குமாறு உங்க அப்பாவிடம் சொல்லு என்று கொடுமைப்படுத்துவார்.

அஸ்வினியின் தந்தையாக சாருஹாசன், கவலை மறந்து சிரித்தபடி வலம் வரும் அஸ்வினி சகோதரி மதுபாலனி என இந்த படத்தின் கேரக்டர்கள் அமைந்திருக்கும். இந்த நிலையில் தான் புதிதாக அந்த ஊருக்கு வந்த வாத்தியாரும் அஸ்வினியின் தங்கையும் காதலிப்பார்கள். ஒரு கட்டத்தில் நீங்களே ஏன் அவளை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று விஜயன் அவரை ஏத்திவிடுவார்.

இந்த நிலையில் அந்த ஊருக்கு சுகாதாரத்துறை அதிகாரியாக வந்த சரத்பாபு அஸ்வினியை பார்ப்பார். அவர் ஏற்கனவே அஸ்வினையை திருமணம் செய்ய முயற்சித்து இருப்பார். ஆனால் அது நடந்திருக்காது. இந்த சமயத்தில் வேறொருவரை திருமணம் செய்து அவர் கஷ்டப்படுவதை கண்டு சகிக்காமல் அவருக்கு ஆறுதல் கூறுவார்.

இந்த விஷயம் விஜயனுக்கு தெரிய வர அவர் கோபம் அடைந்து நீ உன் காதலனுடன் போய்க் கொள், எனக்கு உன் தங்கையை கட்டிக் கொடு என்று சொல்வார். இதனால் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து அஸ்வினி தனது குழந்தைகளுடன் தனது தந்தை வீட்டுக்குச் சென்று விடுவார்.

ஒரு கட்டத்தில் நோய்வாய்ப் பட்டு படுக்கையாக அஸ்வினி இருக்கும் நிலையில்,அவரை பார்க்கக்கூட விஜயன் வரமாட்டார். ஒரு கட்டத்தில் அஸ்வினி இறந்து விடுவார். இந்த நிலையில் தான் அஸ்வினியின் தங்கைக்கு திருமணம் உறுதி செய்யப்படும். இந்த நிலையில் வேறொரு பெண்ணை விஜயன் திருமணம் செய்து கொள்வார்.

ஆனால் அஸ்வினி தங்கையை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்ற ஏமாற்றம் அவருக்கு இருக்கும். இந்த நிலையில் திருமணத்திற்கு முதல் நாள் அஸ்வினியின் தங்கை , விஜயன் வீட்டுக்கு வந்து தனது அக்காள் குழந்தைகளை தன்னிடம் கொடுத்து விடுமாறு கேட்பார். அப்போது விஜயன், கதவை அடைத்து அவளுடைய ஒவ்வொரு ஆடையாக உருவி விடுவார். ஆனால் கெடுக்க மாட்டார்.

உனக்கு இதுதான் தண்டனை. நீ உன் கணவனுடன் சேரும்போதெல்லாம் இது ஞாபகத்துக்கு வரவேண்டும், சாகுற வரைக்கும் இதனை மறக்க மட்டாய்’ என்பார். இந்த விஷயம் ஊராருக்கு தெரிந்து கொதித்து போவார்கள். அவரை கொலை செய்ய வேண்டும் என ஊர் மக்கள் ஆத்திரத்தோடு இருப்பார்கள்.

அப்போது நீங்கள் என்னை கொலை செய்ய வேண்டாம். நானே செத்துவிடுகிறேன். என்னை மாற்ற வேண்டுமென்று நீங்கள் முயற்சித்தீர்கள். ஆனால் இப்போது நீங்கள் என்னைப் போல் கொலை செய்ய துணிந்துவிட்டீர்கள் என்று கூறிவிட்டு விஜயன் தானாகவே ஆற்றில் விழுந்து இறந்து விடுவார். அம்மாவும் அப்பாவும் இல்லாமல் இரண்டு குழந்தைகள் உதிரிப்பூக்களாக இருப்பதுடன் கதை முடியும்.

இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் வசூலில் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். 'அழகிய கண்ணே' என்ற பாடல் இன்று வரை பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவிய திரைப்படத்தை தந்த மகேந்திரன் இன்று இல்லை என்றாலும் அவருடைய உதிரிப்பூக்கள், சினிமா இருக்கும் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவை உலுக்கி எடுத்த படம்.. இன்று வரை மறக்க முடியாத ‘உதிரிப்பூக்கள்’

Updated On: 19 Aug 2023 5:34 AM GMT

Related News