மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்தவர் சாவு
மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
HIGHLIGHTS
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை என்ற ஊரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 49). இவர் மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்தவர். வேல்முருகனுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர் தனது மகனுக்கு சாதி சான்றிதழ்கேட்டு விண்ணப்பித்து இருந்தார். பல மாதங்களாக அவர் சாதி சான்றிதழ்கேட்டு அரசு அலுவலகங்களுக்கு அலைந்தார். சென்னை கோட்டையில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரியை பார்த்தும் கோரிக்கை மனு கொடுத்தார். ஆனால் அவர் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்தது. அவர் மகனுக்கு சாதி சான்றிதழ் கிடைக்கவில்லையே என்ற கவலையில் கடந்த சில நாட்களாக சோகமாக இருந்தார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சென்னை ஐகோர்ட்டுக்கு அவர் வந்தார். அங்குள்ள வடக்கு கோட்டை சாலையில் உள்ள நுழைவுவாயில் முன்பு வந்தார். அப்போது ஒரு கேனில் கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்தார். தீ மளமள என்று அவர் உடல் மீது பற்றி எரிந்தது. உடலில் பற்றி எரிந்த தீ பிளம்புடன் அவர் கோர்ட்டு வளாகத்தின் உள்ளே நடந்து சென்றார். மேலும் உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டே இருந்தார். இதனால் தீ உடல் முழுவதும் பற்றி எரிந்ததால் அருகில் இருந்த வக்கீல்கள் மற்றும் போலீசாரால் அவரை நெருங்க முடியவில்லை.
சிலர் ஓடிச்சென்று இலவச சட்ட ஆலோசனை மையம் அருகில் இருந்த தீயணைக்கும் கருவியை கொண்டு வந்து வேல்முருகன் மீதுபற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ பற்றி உடல் முழுவதும் எரிந்தநிலையில் அவர் கீழே விழுந்தார். அவர் மீது சிலர் போர்வையை போர்த்தி தீ முழுவதையும் அணைத்தனர். அவரை காப்பாற்ற முயன்ற போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினகரன் என்பவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வேல்முருகன், அங்கு கூடிநின்ற வக்கீல்கள் மற்றும் பொதுமக்களை நோக்கி சத்தமாக பேசினார். 'நான் மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்தவன். எனது மகனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகங்களில் அலைந்து விட்டேன். ஆனால் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன். இனிமேலாவது பொதுமக்களுக்கு சாதி சான்றிதழ் உடனுக்குடன் கிடைக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.
உடனடியாக வக்கீல்கள் ஆம்புலன்ஸ் வேனை வரவழைத்தனர். உடல் முழுவதும் தீக்காயங்களுடன் வேல்முருகன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்த சைதாப்பேட்டை பெண் மாஜிஸ்திரேட்டு அனிதா ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று வேல்முருகனிடம் வாக்குமூலம் பெற்றார். இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் புதன்கிழமை அன்று பரிதாபமாக இறந்தார்.
ஐகோர்ட்டு வளாகத்திலேயே வேல்முருகன் தீக்குளித்து இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் மகனுக்கு சாதி சான்றிதழ் கிடைக்க தாமதமான காரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்த பிரச்சினையை சென்னை ஐகோர்ட்டு இப்போது கையில் எடுத்துள்ளது. அவர்கள் தாமாகவே முன்வந்து வேல்முருகன் மகனுக்கு சாதி சான்றிதழ் கிடைக்க தாமதம் ஆன காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.