நிலவின் தூசிகள் ரூ.3 கோடிக்கு ரகசிய ஏலம் விட ஏற்பாடு: தடுத்து நிறுத்தியது நாசா ஆய்வு மையம்-ருசிகர தகவல்..!
நிலவில் இருந்து நாசா ஆய்வு மையம் எடுத்து வந்த தூசிகள் ரூ.3 கோடி ரூபாய்க்கு ரகசிய ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது. இதையறிந்து, நாசா ஆய்வு மையம் அதனை அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளது.
HIGHLIGHTS
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா. இந்த ஆய்வு மையம் கடந்த 1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு சென்று ஆய்வு செய்தது. ஆய்வில், நிலவின் மேற்பரப்பில் இருந்த 47 பவுண்டுகள் (21.3 கிலோ கிராம்) எடையுள்ள சந்திர பாறைகள் பூமிக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, நிலவின் பாறைத்துகள்கள் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்குமா? என நாசா ஆய்வு மையம் பரிசோதனை நடத்தியது. இதற்காக நிலவின் மேற்பரப்பில் இருந்த துகள்கள் கரப்பான் பூச்சிக்கும் மீனுக்கும் உணவாக தரப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த துகள்களை உண்ட கரப்பான் பூச்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், இதில், கரப்பான்பூச்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்தது. இந்நிலையில், நாசாவுக்கு சொந்தமான சுமார் 40 மில்லி கிராம் நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட தூசி மற்றும் மூன்று இறந்த கரப்பான் பூச்சிகள் கொண்ட ஒரு குப்பியை உள்ளடக்கிய சோதனை பொருள் தற்போது ரகசிய ஏலத்திற்கு வந்துள்ளது.
இது, குறைந்தபட்சம் 400,000 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், இந்த ஏல விற்பனையை நாசா சட்டப்பூர்வ நடவடிக்கை மூலம் அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளது. மேலும் இந்த பொருட்கள் நாசா ஆய்வு மையத்திற்கு உரிமை உடையது எனவும் அந்த மையம் தெளிவுபடுத்தியுள்ளது.