/* */

உடல்நலக் குறைவால் விழுப்புரம் டிஎஸ்பி மரணம்

திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த விழுப்புரம் குழந்தைகள் பெண்கள் பிரிவு டிஎஸ்பி உடலுக்கு மாவட்ட எஸ்பி நேரில் அஞ்சலி

HIGHLIGHTS

உடல்நலக் குறைவால் விழுப்புரம்  டிஎஸ்பி  மரணம்
X

டிஎஸ்பி வெங்கடேசன்(பைல் படம்)

உயிரிழந்த டிஎஸ்பி உடலுக்கு எஸ்பி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

செங்கல்பட்டு மாவட்டம், இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் ( 56). இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.இவர் தற்போது கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து வந்தார்.

தினமும் அங்கிருந்து விழுப்புரத்திற்கு பணிக்கு வந்து செல்வார். இந்நிலையில் நேற்று காலை தனது வீட்டில் இருந்து விழுப்புரத்திற்கு பணிக்கு வருவதற்காக புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கெனவே வெங்கடேசன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறினார்.

இதையடுத்து அவரது உடல், சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசனுக்கு எழிலரசி என்ற மனைவியும், ஜெயகிருஷ்ணன் என்ற மகனும், யுகநிலா என்ற மகளும் உள்ளனர். எழிலரசி, தற்போது கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். ஜெயகிருஷ்ணன் பி.ஏ.வும், யுகநிலா பல் மருத்துவ படிப்பும் படித்து வருகின்றனர்.

Updated On: 1 Feb 2023 6:00 PM GMT

Related News