குடியாத்தம் அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் மருத்துவ படிப்பிற்கு தேர்வு
குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற நான்கு மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வு பெற்று சாதனை
HIGHLIGHTS
2021-2022ம் கல்வியாண்டுக்கான'நீட்' தேர்வு 2021 அக்.,12ல் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கவுன்சிலிங் நடந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டு கவுன்சிலிங்கில் நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற நான்கு மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வு பெற்றுள்ளனர்
குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர் வசந்த் மதுராந்தகம் கற்பக விநாயகர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லூர்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மூன்று மாணவிகளுக்கு மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது.
ஹரிணி என்ற மாணவி, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க தேர்வு பெற்றுள்ளார்.
ஐஸ்வர்யா என்ற மாணவி சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி உள்ளார்.
மணிமொழி என்ற மாணவி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்க தேர்வு பெற்றுள்ளார்.
அரசு பள்ளியில் பயின்று மருத்துவ படிப்பிற்கு தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் சவுந்தரராஜன், குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவர் சத்யானந்தம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் மாயாபாஸ்கர், தயாளன், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.