அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து தமிழர் விடுதலை கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
அமைச்சர் ராஜகண்ணப்பன் பதவி விலகக் கோரி நெல்லையில் தமிழர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி ரீதியாக திட்டி மன உளைச்சலை ஏற்படுத்திய அமைச்சர் ராஜகண்ணப்பன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி நெல்லையில் தமிழர் விடுதலை களம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியது குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அவரது அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு தமிழர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேவேந்திர குல வேளாளர் வகுப்பைச் சார்ந்த முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை ஜாதி பெயரைச் சொல்லி இழிவாக ஒருமையில் பேசியுள்ள தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் மீது உடனடியாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து அவரது பதவியை பறிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் (கிழக்கு) மங்களராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பிரதிநிதி போஸ் பாண்டியன், தச்சை பகுதி செயலாளர் அந்தோணி, பாளை பகுதி தலைவர் முருகன், மானூர் ஒன்றிய செயலாளர் சுத்தமல்லி மகாராஜன், பாளை ஒன்றிய செயலாளர் தருவை மகேஷ், மானூர் ஒன்றிய தலைவர் சீவல் பாண்டியன் மற்றும் சோனியா முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மேலப்பாளையம் பகுதி செயலாளர் கருங்குளம் சிவா நன்றி கூறினார்.