/* */

உலக சாதனைக்காக கண்களை மூடியபடி யோகாசனம் செய்து அசத்திய நெல்லை சிறுமி

உலக அளவில் இதுவரை கண்ணை மூடிக்கொண்டு யோகாவில் இதுபோன்று கடினமான ஆசனங்களை யாரும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

HIGHLIGHTS

புதிய உலக சாதனைக்காக கண்களை மூடிக்கொண்டு கடினமான 29 ஆசனங்களை செய்து அசத்தினா் நெல்லையைச் சேர்ந்த 11 வயது சிறுமி பிரிஷா.

நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன்-தேவிப்பிரியா தம்பதியின் மகள் பிரிஷா (11). இவர் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். யோகா மீது உள்ள ஆர்வத்தால் சிறுமி பிரிஷா தனது குழந்தைப் பருவத்திலிருந்தே பல்வேறு கடினமான யோகா ஆசனங்களை கற்று வருகிறார்.

இதன்தொடர்ச்சியாக, சிறுமி பிரிஷா இதுவரை 41 உலக சாதனைகள் படைத்துள்ளார்.மேலும் உலகின் முதல் இளம் வயது யோகா ஆசிரியர் என்ற பட்டத்தை மத்திய அரசின் என்.சி.பி.ஆர் அமைப்பு இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது. அதேபோல் உலகின் முதல் இளம் கௌரவ டாக்டர் பட்டத்தை நியூஜெருசலேம் பல்கலைக்கழகம் சிறுமி பிரிஷாவுக்கு வழங்கியுள்ளது.

இதுபோன்று பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள பிரிஷா கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனோ தொற்று காரணமாக வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு யோகா கற்றுக் கொடுத்து வருகிறார்.

அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இலவசமாக யோகா வகுப்பு எடுத்து வருகிறார். இவரின் திறமையை கண்டு வியந்த முன்னாள் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அதிசயத்தக்க தனித்திறமை உள்ள குழந்தை என்று சிறுமி பிரிஷாவை பாராட்டியிருந்தார். இதுபோன்று சாதனைகளின் இளவரசியாகத் திகழ்ந்து வரும் சிறுமி பிரிஷா தற்போது யோகாவில் புதிய உலக சாதனை படைப்பதற்காக கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு கடினமான 29 வகையான ஆசனங்களை செய்து அசத்தியுள்ளார்.

அமெரிக்காவிலுள்ள எலைட் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் சார்பில் பிரிஷாவின் உலக சாதனையோகாசன நிகழ்வு நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் மனோன்மணியம் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் சேது, அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பெரியதுரை மற்றும் சிவராமன் ஆகியோர் முன்னிலையில் சிறுமி பிரிஷா 29 ஆசனங்களை செய்து காட்டினார்.

கண்களை கட்டிக்கொண்டு கபோடா ஆசனத்தில் அதிவேகமாக ரூபிக்ஸ் க்யூப் சரிசெய்வது, வாமதேவ ஆசனத்தில் அதிவேகமாக பிரைன் விட்டாவை சரி செய்வது, விபரீத கண்ட பேருண்ட ஆசனத்தில் பிரைன் விட்டாவை அதிவேகமாக சரி செய்வது, ஐந்து நிமிடங்கள் கையால் அதிவேகமாக சைக்கிள் ஓட்டுவது, கண்களை கட்டிக் கொண்டு ஸ்கேட்டிங்கில் பந்தை அதிக எண்ணிக்கையில் தரையில் தட்டுவது உள்ளிட்ட 29 கடினமான யோகாசனங்களை செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

உலக சாதனைக்காக எலைட் நிறுவனம் நிர்ணயித்த இலக்கை விட சிறுமி பிரிஷா இரண்டு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் ஒவ்வொரு ஆசனங்களையும் செய்துள்ளார். பிரிஷாவின் இந்த சாதனைகளின் வீடியோ ஆவணங்கள் எலைட் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் யோகாவில் புதிய உலக சாதனை படைத்த முதல் சிறுமி என்ற பட்டத்தை எலைட் நிறுவனம் பிரிஷாவுக்கு வழங்க இருக்கிறது.

உலக அளவில் இதுவரை கண்ணை மூடிக்கொண்டு யோகாவில் இதுபோன்று கடினமான ஆசனங்களை எவரும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது இந்த சாதனைகளை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சமர்ப்பிப்பதாக சாதனைச்சிறுமி பிரிஷா பெருமிதம் தெரிவித்தார்.

Updated On: 8 July 2021 8:08 AM GMT

Related News