நெல்லை மாவட்ட ஆட்சியராக கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்பு
நெல்லை மாவட்ட ஆட்சியராக கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆக இருந்த விஷ்ணு வேறு இடத்திற்கு பணிமிட மாற்றம் செய்யப்பட்டார் . அதனை தொடர்ந்து நெல்லை மாவட்ட புதிய ஆட்சித் தலைவராக மருத்துவர் கா.ப. கார்த்திகேயன் அறிவிக்கப்பட்டார். அவர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய ஆட்சியரை மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். இவர் ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக பணியாற்றியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து ஆட்சியர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கல்வி சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பொதுமக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிகளும் சிறப்பாக நடத்தப்படும். அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகள் சரி செய்யப்படும். வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் பங்கேற்க வரும் பொதுமக்கள் தீக்குளிப்பு முயற்சிகளில் ஈடுபடுவதை தடுக்க காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசின் முன்னோடி திட்டங்களை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும். என்றார்.
அதனைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.