ஆவணங்கள் இல்லாத ரூ. 1.44 லட்சம் பறிமுதல்
திருநெல்வேலி பழையபேட்டை பகுதியில் நடத்திய வாகன சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் சார்பில் தீவிர வாகனசோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி பழைய பேட்டை பகுதியில் தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர் சிதம்பரம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கேரள மாநிலம் கொட்டாரகரையிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு மீன் வாங்க வந்த மினி லாரியை சோதனை செய்ததில் லாரியில் இருந்த சசூருதீன் என்பவரிடம் எந்தவித ஆவணமும் இன்றி கணக்கில் வராத 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பின்னர் வாகனத்தை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து பிடிபட்ட பணத்தை வருவாய்த்துறையிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை அளித்து விட்டு பின்னர் பணத்தை பெற்று கொள்ளலாம் என்று வருவாய் துறையினர் அவர்களிடம் தெரிவித்தனர்.