சாலைகளில் சுற்றி திரியும் கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை: ஆணையாளர் எச்சரிக்கை
சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு அபராம். மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் எச்சரிக்கை.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக கால்நடைகளை சாலைகளில் சுற்றி திரிய விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் கால்நடை வளர்ப்போர் அவற்றை முறையாக வீடுகளில் கட்டி வைத்து வளர்ப்பதில்லை. காலை வேளைகளில் கால்நடைகளில் பால் கரந்த பிறகு அவற்றை வெளியில் மேய்ச்சலுக்கு விடும் உரிமையாளர்கள், பின்னர் அதைப்பற்றி கண்டுகொள்வதே இல்லை. இதனால் விதிமுறைகளை மீறி கால்நடை வளர்க்கும் உரிமையாளர்கள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பல்வேறு சாலைகள், தெருக்கள், பொது இடங்களிலும் சுற்றித்திரிய விடுகிறார்கள்.
இவ்வாறு பொதுப் போக்குவரத்திற்கு இடையூறாக கால்நடைகள் சுற்றிதிரிவதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.
எனவே, இவற்றைத் தடுக்கும் பொருட்டு, திருநெல்வேலி மாநகராட்சியின் சார்பாக கடந்த காலங்களில் சம்பந்தப்பட்ட கால்நடை வளர்க்கும் உரிமையாளர்களிடம் தகுந்த அறிவுரைகள் வழங்கியும், விதிமுறைகள் பின்பற்றாத உரிமையாளர்களிடம் கால்நடைகளை கோசாலைகளில் ஒப்படைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடந்த வராத்தில் மட்டும் மாநகராட்சியின் 4 மண்டல பகுதிகளில் மொத்தம் 80 கால்நடைகள் கோசாலைகளில் வைக்கப்பட்டுள்ளது. கோசாலையில் வைக்கப்பட்டுள்ள கால்நடை ஒன்றிக்கு குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை இனி வரும் காலங்களில் கைப்பற்றும் பட்சத்தில் மாடுகளுக்கு ரூ.5000 முதல், ரூ.10000 வரை அபராத தொகையை உயர்த்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக சாலைகளில் மாடுகளை சுற்றி திரிய விடும் உரிமையாளர்கள் மீது மாநகராட்சி சட்டம்-1994 மற்றும் பொதுசுகாதார சட்டம் 1939 மூலம் தக்க நடவடிக்கை எடுப்பதுடன், வழக்கு பதிவு செய்து காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே மாடுகளை கோசாலைகளில் வைக்கப்படாமல் இருக்க கால்நடை உரிமையாளர்கள் கவனமாக கால்நடைகளை வீட்டில் வைத்து பராமரித்திட வேண்டும். தவறும் பட்சத்தில் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.